பெங்களூரில் இந்து தலைவர்களை கொல்ல முயற்சி.. தீவிரவாத ஆதரவாளர்கள் 13 பேர் குற்றவாளிகள்
பெங்களூர்: கர்நாடகா, தெலுங்கானாவில் இந்து மத முன்னணி நிர்வாகிகளை கொலை செய்ய திட்டமிட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 13 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படுகிறது.
பெங்களூர், ஹூப்ளி, தெலுங்கானாவில் உள்ள இந்து நிர்வாகிகள் சிலரை தீர்த்துக்கட்ட முயன்ற குற்றச்சாட்டின்பேரில் 2012ல் 14 பேர் பல்வேறு நகரங்களில் கைது செய்யப்பட்டனர். தேசிய பாதுகாப்பு ஏஜென்சி இந்த வழக்கை விசாரித்து வந்தது. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், ஜாகிர் என்பவர் மட்டும் தப்பியோடிவிட்டார்.
எனவே எஞ்சிய 13 பேரும் குற்றவாளிகள் என இன்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்கள் பத்திரிகையாளர்கள், பத்திரிகைகளில் கட்டுரை எழுதுவோர் சிலரையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததை கோர்ட் உறுதி செய்துள்ளது.
தண்டனை விவரம் இன்று மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படும் எனவும் கோர்ட் அறிவித்தது. ஆனால், தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என கோர்ட் மதியம் மீண்டும் அறிவித்தது.