பெங்களூரில் கால்சென்டர் ஊழியர் பலாத்காரத்திற்கு உள்ளான வேன் போலீஸ் வசம்! 2 பேர் கைது
பெங்களூர்: கால்சென்டர் ஊழியர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படைகளை அமைத்துள்ள பெங்களூர் போலீசார், பலாத்காரத்தில் ஈடுபட்ட இருவரை கைது செய்துள்ளனர். பலாத்காரத்திற்கு உள்ளான வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் பணியாற்றும் ம.பியை சேர்ந்த, 23 வயது கால்சென்டர், பெண் ஊழியர் சனிக்கிழமை இரவு பலாத்காரம் செய்யப்பட்டார். ஓடும் வேனில் அவர் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க காவல்து்றை 3 தனிப்படைகளை உருவாக்கியுள்ளது. போலீசாரிடம் அப்பெண் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், வேன் பயணித்த ரோடுகளில் உள்ள சிசிடிவிகளை கொண்டு ஆய்வு நடந்தது.
குற்றவாளிகளின் உருவ அமைப்பு குறித்து, பெண்மணி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பெங்களூர் சித்ரகலா பரிஷத்திலுள்ள பிரபல ஓவியர்களை கொண்டு, உருவப்படம் வரையும் பணிகள் நடந்தது.
இதனிடையே, சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த வேன் KA 03 B-1863 என்ற பதிவு எண் கொண்டது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்திராநகரை சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமான வேன் அது என்பதும் தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் தனது வேன் இயங்கிவருவதாக தெரிவித்தார்.
எஸ்.ஆர்.எஸ் நிறுவனத்திடம் விசாரித்தபோது, அவர்கள் பாதிக்கப்பட்ட பெண் பணியாற்றிய பொம்மனஹள்ளியிலுள்ள, ஹெச்.ஜி.எஸ் என்ற பிபிஓ நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளதாக தெரிவித்தனர்.
சம்பவத்தன்று வேனை இயக்கியது யோகேஷ் என்ற டிரைவர் எனவும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் யோகேஷை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது உறவுக்காரர் சுனில் என்பவரோடு சேர்ந்து பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சுனிலும் கைது செய்யப்பட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட வேன், மடிவாளா காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. வேனுக்குள், நகம், கூந்தல், துணி, விந்து துளி போன்ற ஏதாவது ஆதாரங்கள் கிடைக்குமா என்று போலீசார் சோதனை நடத்தனர்.