பெங்களூரு குண்டுவெடிப்பு- எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையை தொடங்கியது தேசிய புலனாய்வு ஏஜென்சி!
பெங்களூர்: பெங்களூரை அதிர வைத்த சர்ச் தெரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து அதிகாரப்பூர்வமாக விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர்தம் மாதம் பெங்களூருவின் பரபரப்பான சர்ச் தெருவில் குண்டுவெடித்தது. இதில் ஒரு பெண் உயிரிழந்தார்.
பெங்களூரு போலீசார் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தியும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேசியப் புலனாய்வு ஏஜென்சி ஐ.பி.சி. 120 (b) பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர். தற்போது தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரப்பூர்வமாக தமது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சென்னை ரயில் குண்டுவெடிப்பு, உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் குண்டுவெடிப்பு ஆகியவற்றுக்கும் பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.