சுற்றுலா சென்ற இடத்தில் மாணவிகளிடம் சில்மிஷம்: கல்லூரி முதல்வரை அடித்து நொறுக்கிய மாணவர்கள்
ஹூப்ளி: ஹூப்ளியில் உள்ள தனியார் கலைக்கல்லூரி முதல்வர் கோவாவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள தனியார் கலைக்கல்லூரி ஒன்றின் முதல்வராக இருப்பவர் ஆனந்த் வட்டின். அவர் கடந்த 3ம் தேதி மாணவ, மாணவியரை கோவாவுக்கு கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். கோவாவில் அவர் மது அருந்திவிட்டு குடிபோதையில் சில மாணவிகளிடம் சில்மிஷம் செய்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
முதல்வர் என்பதால் மாணவிகள் எதுவும் கூறாமல் சுற்றுலாவின்போது தங்ளின் மானத்தை காக்க போராடியுள்ளனர். இதையடுத்து ஊர் திரும்பியதும் நடந்தது பற்றி மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோரும், மாணவர்களும் கல்லூரிக்கு முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் இருந்த முதல்வரின் காரை அடித்து நொறுக்கினர்.
ஆத்திரம் தீராத மாணவர்கள் முதல்வரை பிடித்து அடித்து நொறுக்கினர். இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களை சமாதானம் செய்தனர். மேலும் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்த முதல்வர் ஆனந்த், ஆசிரியர்கள் கோபால் பிராதார் மற்றும் ஷெர்லி ஆகியோரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் மூன்று பேரையும் வரும் 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.