பெங்களூர் மாநகராட்சி ஆபீசில் அட்டூழியம் செய்யும் எலிகளை பிடிக்க ரூ.5 லட்சத்துக்கு டெண்டர்
பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில், தொல்லை கொடுக்கும் எலிகளை பிடிப்பதற்காக ரூ.5 லட்சம் மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.
பெங்களூர் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கணக்கில் எலிகள் தொல்லை செய்து வருகின்றன. மாநகராட்சி அறைகளில் வைத்துள்ள காகித கோப்புகளை கடிதத்து குதறிவிடுகிறது. கோப்புகள் நாசமாகிவிடுவதால், ஆவணங்கள் கிடைக்காமல் அதிகாரிகள் பரிதவிக்கும் நிலை ஏற்படுகிறது.
இது தவிர மின்சார வயர்கள், கம்ப்யூட்டர் இணைப்புகளும் எலிகளால் கடித்து குதறப்படுகின்றன. இதனால் இயந்திரங்கள் செயல்படாமல் ஊழியர்கள் அவதிப்படுகிறார்கள்.
இதனால் அதிருப்தியடைந்துள்ள மாநகராட்சி நிர்வாகம், பெருகிவரும் எலிகளை பிடிப்பதற்கு டெண்டர் விட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றும் ரூ.4.97 லட்சத்திற்கு டெண்டர் எடுத்துள்ளது. எலிகளை பிடிக்கும் பொறுப்பு இரண்டாண்டுகள் அந்நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்நிறுவனம் மாநகராட்சி தலைமை அலுவலகம் மட்டுமில்லாமல், டவுன்ஹால், மல்லேஸ்வரம் பகுதியிலுள்ள ஐபிபி மையம் ஆகிய அலுவலகங்களிலும் எலி பிடிக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை எத்தனை எலிகள் பிடிக்கப்பட்டுள்ளது என்ற கணக்கை சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 அக்டோர்பர் முதல் 2013 ஜனவரி வரை 6 மாதங்கள் ரூ.2 லட்சம் செலவு செய்யப்பட்டது. இதில் 6 மாதங்களில் 20 எலிகள் மட்டுமே பிடிக்கப்பட்டுள்ளது. ஒரு எலி பிடிக்க ரூ.10 ஆயிரம் செலவு செய்யப்பட்டுள்ளது.