அடித்தது ஜாக்பாட்.. பெங்களூர் வளர்ச்சிக்கு ரூ.7300 கோடியை பல்க்காக ஒதுக்கிய கர்நாடக அரசு!
பெங்களூர்: இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் பெங்களூரு மீது பல வருடங்கள் கழித்து மாநில அரசுக்கு அக்கறை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நகர வளர்ச்சிக்கு ரூ.7300 கோடியை பம்பர் பரிசாக அறிவித்துள்ளது சித்தராமையா தலைமையிலான மாநில அரசின் அமைச்சரவை.
அமைச்சரவையின் இந்த முடிவை தொடர்ந்து, முதல்கட்டமாக ரூ.6050 கோடியை ஒதுக்கீடு செய்து நிதி அமைச்சகமும் பச்சைக்கொடி காட்டிவிட்டது. இனி என்ன.. சாலை மேம்பாடு, மழைநீர் வடிகால் வசதி, கழிவுநீர் அகற்றும் வசதி ஆகியவற்றில் அதிகாரிகள் முழு கவனம் செலுத்த வேண்டியதுதான் பாக்கி.
மாநில அரசின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில், மொத்தம் 28 சட்டசபை தொகுதிகளை ஒரே இடத்தில் வைத்துள்ள பெங்களூரை குறி வைத்து காய் நகர்த்த ஆரம்பித்துள்ளது காங்கிரஸ் அரசு.
தேர்தல் ஆயத்தம் மட்டுமின்றி, பெங்களூரில் தொழில் நடத்தும் அதிபர்களின் நெருக்கடிக்கும் செவி சாய்த்துள்ளது அரசு. சாட்ஷாத், முதல்வர் சித்தராமையாவால் உருவாக்கப்பட்ட விஷன் குரூப் என்ற தொழில் ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள பல தொழிலதிபர்களும் முதல்வருக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து, அமைச்சரவையை பெங்களூருக்கு சாதகமான முடிவை எடுக்க வைத்துள்ளனர்.
'முதல்வர் நகரோத்தானா' என்ற திட்டத்தின் பெயரில் இந்த நிதி செலவிடப்பட உள்ளது.