அந்நியனாக மாறிய அம்பி பெங்களூர்
பெங்களூர்: கோடையிலும் குளு குளு என்று இருந்த பெங்களூரில் அடுத்த சென்னை என்று கூறும் அளவுக்கு தற்போது வெயில் சுட்டெரிக்கிறது.
பெங்களூரில் திரும்பும் பக்கம் எல்லாம் மரம், செடிகள் என்று கண்ணுக்கு குளுமையாகவும், கோடையிலும் வெயிலே தெரியாமலும் இருந்த நாட்கள் வேகமாக மலையேறிக் கொண்டிருக்கிறது. மரங்களை வெட்டி கட்டிடங்கள் கட்டி வருவதின் பலனாக பெங்களூரில் வெயில் சுட்டெரிக்கிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை பெங்களூரில் வெயில் புதிய சாதனை படைத்துள்ளது.
40 டிகிரி
கடந்த செவ்வாய்க்கிழமை பெங்களூரில் வெயில் 40 டிகிரி செல்சியஸாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வெயிலின் அளவு 5 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில் வெயிலின் அளவு இவ்வளவு அதிகரித்துள்ளது வானிலை ஆய்வு மைய அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பிப்ரவரி
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே பெங்களூரில் வெயில் கொளுத்தி வருகிறது. முன்பு எல்லாம் மார்ச் மாத இறுதியில் தான் பெங்களூரில் கோடை காலம் துவங்கும். ஆனால் தற்போது பிப்ரவரி மாத இறுதியிலேயே கோடை துவங்கிவிட்டது.
மார்ச்
மார்ச் மாதத்தின் முதல் பாதி இரண்டாவது பாதியை விட வெப்பமாக இருந்தது. மார்ச் மாதத்தில் பெங்களூரில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு பெங்களூரில் மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 36.7 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது.
வெயில்
அடுத்த இரண்டு நாட்களுக்கு பெங்களூரில் வெயிலின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றில் வெறும் 20 சதவீதமே ஈரப்பதம் இருக்கிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு நகரில் மழையையும் எதிர்பார்க்க முடியாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெக்கை
ஒரே வெக்கையாக உள்ளது, குளித்துவிட்டு குளியல் அறையில் இருந்து வெளியே வந்ததும் வியர்த்துக் கொட்டுகிறது என்று சென்னை மக்கள் கூறுவது வழக்கம். ஆனால் தற்போது இதை பெங்களூர் மக்கள் கூறும் அளவுக்கு வெயில் ருத்ரதாண்டவம் ஆடுகிறது.