முதல்வர் சித்தராமையா மீது ‘சாக்லேட்’ பொட்டலத்தை வீசி வெடிகுண்டு என கத்திய நபர் கைது!
பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வெடிகுண்டு எனக் கூறி மாநகராட்சி ஊழியர் ஒருவர் மர்ம பொட்டலம் வீசிய சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு டவுன்ஹாலில் உள்ள ரவீந்திரகலா சேத்ரா அரங்கில் உதயபானி கலைசங்கத்தின் வெள்ளிவிழாவின் நிறைவுவிழா நேற்று நடைபெற்றது. இதில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சித்தராமையா பேசத் தொடங்கிய சில நிமிடங்களில், பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்திருந்த ஒருவர் திடீரென எழுந்து ஆவேசமாக, ‘எங்கள் சமுதாயத்திற்கு என்ன செய்திருக்கிறீர்கள்?' என கேட்டார்.
மர்ம பொட்டலம்...
அவருக்கு பதிலளித்த சித்தராமையா, ‘நீங்கள் என்ன சமுதாயம், நான் என்ன செய்யவில்லை?' என கேள்வி எழுப்பினார். இப்படி சித்தராமையா பேசிக் கொண்டிருக்கும்போதே, அந்நபர் தான் கையில் வைத்திருந்த பொட்டலம் ஒன்றை அவரை நோக்கி வீசினார்.
கைது...
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், விரைந்து சென்று அந்த மர்ம பொட்டலத்தை மேடையில் இருந்து அகற்றினர். இதற்கிடையே, பொட்டலத்தை தூக்கிய வீசிய நபரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணை...
அப்போதும் அமைதி அடையாத அந்நபர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதோடு, சித்தராமையாவைப் பார்த்து மீண்டும் மீண்டும், ‘எங்கள் சமுதாயத்திற்கு இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்?' எனக் கேட்டபடியே சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து அல்சூர்கேட் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
சாக்லெட்...
இதற்கிடையே அந்நபர் வீசிய பொட்டலத்தை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அதில், சாக்லெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு வெடிகுண்டு பீதி அகற்றது. பின்னர் நிகழ்ச்சி மீண்டும் தொடங்கியது.
மாநகராட்சி ஊழியர்...
போலீசாரின் விசாரணையில் பொட்டலம் வீசிய நபரின் பெயர் பிரசாத் என்பதும், அவர் பெங்களூரு மாநகராட்சி ஊழியர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பில் பிரச்சினையில்லை...
இந்த சம்பவம் குறித்து சித்தராமையா கூறுகையில், "பாதுகாப்பு நடவடிக்கையில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. ஜனநாயக நாட்டில் இதுபோன்று நடப்பது சகஜமானது. இதுபோன்று பிரச்சினைகளை பல முறை எதிர் கொண்டுள்ளேன்.
தூண்டுதலின் பேரில்...
சாதாரண குடிமகன் போல இந்த நிகழ்ச்சியில் அந்த நபரும் கலந்து கொண்டு இருக்கிறார். இதனை அந்த நபர் தானாகவே செய்யவில்லை. யாருடைய தூண்டுதலின் பேரில், இவ்வாறு அந்த நபர் நடந்து கொண்டுள்ளார். அவர் எந்த சாதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
வதந்தி...
எந்த சாதிக்கு அநியாயம் நடந்திருப்பதாக கூறுகிறாரோ, அதனை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும். பொட்டலத்தில் வெடிகுண்டும் இல்லை, ஒன்றும் இல்லை. இதுபோல, பல்லாரியில் மாநகராட்சி அதிகாரியை நான் அடித்ததாகவும், அவர் கீழே விழுந்ததாகவும் வதந்தியை பரப்பினார்கள். அந்த சம்பவம் நூறு சதவீதம் பொய்யானது" என்றார்.