கொடைக்கானல், கோவையை குளிப்பாட்டிய கோடை மழை.. பெங்களூருக்கும் வாய்ப்பாம்
பெங்களூர்: கோவை, கொடைக்கானல், திருவாரூர் போன்ற பகுதிகளில் இன்று மழை பெய்துள்ள நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் பெங்களூரில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கர்நாடக இயற்கை பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் திருவாரூரில் இன்று சுமார் அரை மணி நேரம் நல்ல மழை பெய்தது. கோவையில் இன்று பிற்பகல் மழை பெய்தது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
கோடை வெப்பத்திற்கு இதமாக இந்த மழை உள்ளது. கொடைக்கானலில் காலை பனி மூட்டத்துடன் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டனர்.
இதேபோல குரங்கணி காட்டுப்பகுதியிலும் இன்று பரவலாக மழை பெய்தது.
இந்தநிலையில் பெங்களூரில் நாளை அல்லது நாளை மறுநாள் மழை பெய்ய கூடும். அல்லது இரு நாட்களுமே மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பத்தை எதிர்கொண்டுவந்த பெங்களூர் மக்களுக்கு இது மகிழ்ச்சி செய்திதான்.