கர்நாடகாவில் டூவீலரில் பின்னால் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!
பெங்களூரு: இருசக்கர வாகனங்களில் வாகனம் ஓட்டுப்பவர்கள் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு புதன்கிழமை முதல் கர்நாடகாவில் அமலுக்கு வந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய விதிமுறை மாநிலம் முழுவதும் கடந்த 12ம் தேதி முதல் அரசு அமல்படுத்தியது.
ஆனால், இந்த புதிய விதிமுறைக்கு எதிர்க்கட்சிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனபோதும் அரசு அந்த உத்தரவைத் திரும்பப் பெறவில்லை.
இன்று முதல் அபராதம்...
மேலும், இந்த விதிமுறை 12ம் தேதியே அமல் படுத்தப்பட்ட போதும், விதிமுறையை மீறுபவர்களுக்கு 20ம் தேதி முதலே அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துக் காவலர்கள் தெரிவித்திருந்தனர்.
அறிவுரை மட்டும்...
அதுவரை ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு அறிவுரை வழங்குவது என்றும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
விழிப்புணர்வு...
அதன்படி, கடந்த 8 நாட்களாக ஹெல்மெட் கட்டாயம் குறித்து பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் போக்குவரத்து போலீசார் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர்.
அபராதம்...
இந்நிலையில், இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணியாவிட்டால் அவர்களிடமும் போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர்.
கோர்ட்டில் ஆஜர்...
விதிமுறையை மீறுபவர்களிடம் முதல் முறை ரூ.100, 2-ம் முறை ரூ.300, 3-ம் முறை ரூ.500 அபராதமாக வசூலிக்கப்பட உள்ளது. 4-வது முறையும் அவர்கள் விதிமுறையை மீறினால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
ஒத்துழைப்பு தேவை...
இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிந்து சென்றால் விபத்துகளின்போது ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்கலாம். எனவே, பொதுமக்கள் இந்த புதிய திட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் விளக்கம்...
இதற்கிடையே, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பது, கர்நாடக அரசு கொண்டுவந்த உத்தரவு இல்லை. உச்சநீதிமன்ற உத்தரவால் அமல் செய்யப்பட்டுள்ளது. சரியாக அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என்பதை மக்கள் உணர வேண்டும் என முதல்வர் சித்தராமையா அறிக்கை வாயிலாக விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.