புத்தாண்டு கொண்டாட்டம்: பெங்களூருவில் இன்று இரவு முதல் காலை வரை மேம்பாலங்களில் வாகனங்கள் செல்ல தடை!
பெங்களூரு: குண்டுவெடிப்பு பதற்றம் நீங்காத நிலையில் பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் அசம்பாவிதங்கள் நிகழாத வகையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பெங்களூரு நகரின் மேம்பாலங்களில் இரவு முதல் காலை வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு சர்ச் சாலையில் குண்டுவெடித்ததில் சென்னையைச் சேர்ந்த பவானி என்பவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துக்குக் காரணமான தீவிரவாதிகளை பெங்களூர் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களை இலக்கு வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நீடித்து வருகிறது. இதனால் பெங்களூரு நகரில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பெங்களூருவின் எம்.ஜி. சாலை, பிரிகேட் சாலை ஆகியவற்றில் புத்தாண்டு கொண்டாட்டங்களைக் கண்காணிக்க அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் பயன்படுத்தப்பட இருக்கிறது. அண்மையில் மைசூரு தசாரா கொண்டாட்டங்களின் போதும் இத்தகைய ஆளில்லா ரிமோட் விமானம் பயன்படுத்தப்பட்டது.
பெங்களூரு நகரில் மொத்தம் 14 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் எம்.ஜி. சாலையை சுற்றி 10 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கமர்சியல் தெரு, இந்திரா நகர் பகுதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கண்காணிப்பு கோபுரத்திலும் 2 போலீசார் சக்திவாய்ந்த பைனாகுலருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 75 சிசிடிவி கேமராக்கள் மூலம் புத்தாண்டு கொண்டாட்டங்களைக் கண்காணிக்க பெங்களூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும் பெங்களூரு நகர மேம்பாலங்களில் இரவு 7 முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விமான நிலைய சாலை தவிர இதர மேம்பாலங்களில் கார்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.