கைதிகளிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து.. உண்மையை சொல்வதை தடுக்க பெங்களூர் சிறை அதிகாரிகள் ஏற்பாடு
பெங்களூர்: பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்குள் கைதிகளை அதிகாரிகள் மிரட்டி வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கியுள்ளதாக வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து சசிகலா சிறைக்குள் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் அதற்காக உயர் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் எழுந்த புகாரை தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தார்.
சிறைதுறை டிஐஜியாக இருந்த ரூபா உள்துறை, சிறைத்துறை டிஜிபிக்கு எழுதிய கடிதத்தால் இந்த விஷயம் அம்பலமாகி விசாரணை வரை சென்றது.
குற்றச்சாட்டு
இந்நிலையில் சிறையில் ஆய்வு செய்த சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயண ராவ் உள்பட உயர் அதிகாரிகள் சிறையிலிருந்த சிசிவிடி காட்சிகளை அழித்து வருவதாக ரூபா மீண்டும் ஒருமுறை குற்றம்சாட்டினரா். இரண்டாவது அறிக்கையில் இதை அவர் தெரிவித்திருந்தார். விசாரணைநடைபெற்றால் பெங்களூர் சிறையிலுள்ள கைதிகள் வாக்குமூலம் அளித்துவிடுவார்கள் என்ற அச்சம் சிறை அதிகாரிகளுக்கு உள்ளது.
மாற்றம்
எனவே சிறைக்குள் அதிகாரிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட 34 கைதிகளை கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூர், பெல்லாரி உள்பட பல்வேறு சிறைகளுக்கு இரவோடு, இரவாக அதிகாரிகள் மாற்றியுள்ளனர். அவர்களை அதிகாரிகள் பணம் கேட்டு மிகவும் கொடுமைபடுத்தி வந்துள்ளனர். எனவே மேலும் ரூபாவிற்கு ஆதரவாக, சிறைக்குள் நடக்கும் உண்மைகளை சொன்ன சிறைக்கைதிகள் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளனர்.
கையெழுத்து
இதுமட்டுமில்லால் வேறு கைதிகள் ஏதாவது சொல்லிவிட்டால் என்ன செய்வது என்பதற்காக, சிறையிலுள்ள 2000 கைதிகளிடம், வெற்று காகிதத்தில் சிறை அதிகாரிகள் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
இதையறித்த சிறை கைதிகளின் உறவினர்கள் கவலையிலுள்ளனர். உண்மையை சொன்னால் இந்த கையெழுத்தை வைத்து அதிகாரிகள் என்னவேண்டுமானாலும் செய்துவிடுவார்களே என்ற அச்சம் அவர்களை வாட்டுகிறது.
அச்சத்தில் உறவினர்கள்
புழல் சிறையில் ராம்குமார் மின் வயரை கடித்து தற்கொலை செய்ததாக கூறி தகவல் வெளியானதை சில கைதிகளின் உறவினர்கள் அச்சத்தோடு சுட்டிக்காட்டுகிறார்கள். ராம்குமார் கையெழுத்திட்ட கடிதம் வெளியானதாகவெல்லாம் அதிகாரிகள் கூறியிருந்ததையும் அந்த உறவினர்கள் சுட்டிக்காட்டி அச்சப்படுகிறார்கள். இப்படி ஒரு கெடுபிடிக்கு நடுவே விசாரணை நடத்தப்படும்போது உண்மை வருமா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.
வேறு சிறைகளிலும் விசாரணை
எனவே கடந்த சில மாதங்களுக்குள் பெங்களூர் சிறையிலிருந்து பெல்லாரி, மைசூர், ஹிண்டல்கா உள்ளிட்ட சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளிடம் விசாரணை அதிகாரி சென்று விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளதாக இச்சம்பவத்தை உற்று நோக்கிவருவோர் கருத்து தெரிவிக்கிறார்கள்.