100 பெண்களை ஏமாற்றி அல்வா கொடுத்த ரோமியோ... மாமியார் வீட்டுக்கு அனுப்பிய போலீஸ்
திருமணம் செய்து கொள்வதாக கூறி நூற்றுக்கணக்கான பெண்களை அல்வா கொடுத்து ஏமாற்றிய மன்மத ராசாவை கைது செய்த பெங்களூரு போலீஸ்.
பெங்களூரு: திருமணத்திற்கு ஒரு பெண் கிடைப்பதே பலருக்கும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் திருமணம் செய்வதாக ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளான் மன்மதராசா ஒருவன். கர்நாடக மாநிலம் பாகலூரில்தான் அந்த ரோமியோவை கைது செய்து மாமியார் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
நான் அவனில்லை சினிமாவில்தான் 9க்கும் மேற்பட்ட பெண்களை பல வேஷங்களில் ஏமாற்றுவான் ஹீரோ கம் வில்லன். அதே பாணியில் 21 வயதாகும் இளைஞன் பல பெண்களை ஏமாற்றியுள்ளான். இத்தனை சாகசங்களும் புரிந்த சடத்கான் ஆட்டோ டிரைவர் என்பதுதான் ஆச்சரியம்.
சடத்கான் என்ற பிரீத்தம்குமார் என்ற கார்த்திக்தான் அந்த ரோமியோ. கர்நாடக மாநிலம் ஹாசன்தான் சடத்கானின் சொந்த ஊர். முஸ்டாக் அகமது- ஷகானாநவாஸ் தம்பதியின் மூன்றாவது மகன். ஐடிஐ மட்டுமே படித்துள்ள சடத்கான், வேலை எதுவும் இல்லாமல் பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டினான்.
குடிக்கு அடிமையான சடத்கானிடம் அவனது பெற்றோர் ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய் வீட்டை விட்டே துரத்தி தண்ணீர் தெளித்து விட்டனர். எந்த வேலையும் செட்டாகவில்லை. காரணம் இவனது ரோமியோதனம்தான்.
பேஸ்புக் கணக்கு ஒன்றைத் தொடங்கிய அவன், திருமண இணைய தளங்களிலும் பதிவு செய்துகொண்டிருக்கிறான். பேச்சிலேயே மயக்கி விடுவான் இவன். மிகப்பெரிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, டாக்டர், பேராசிரியை மற்றும் சில அரசு ஊழியைகளையும் தனது பேச்சினால் மடக்கி ஏமாற்றியுள்ளான்.
திருமண இணையதளம் மூலம் பெண்களைத் தொடர்பு கொள்ளும் இவன், பணக்கார, பணியில் உள்ள பெண்களை டார்க்கெட் வைத்து வளைப்பான். திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களை அப்படி,இப்படி பேசி வளைத்து பேசி பேசியே பணத்தையும் கறந்து விடுவான். பின்னர் கம்பி நீட்டி விடுவதுதான் அவனது ஸ்டைல்.
திருமண இணையதளம்
ஒரு திருமண இணையதளத்தில் பதிவு செய்துகொண்ட சடத்கான், அதன் பிளாட்டினம் உறுப்பினர் ஆகியிருக்கிறான். திருமணமாகாத முதிர்கன்னிகள், விதவைகள், விவாகரத்து ஆனவர்களையும் குறிவைத்து வளைத்திருக்கிறான். கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஹூப்ளி, மைசூரு என கர்நாடக மாநிலத்தில் மட்டுமல்ல, மாநில எல்லை தாண்டியும் தனது லீலையைக் காட்டியிருக்கிறான் இந்த மன்மத ராசா.
பல பெயர்கள், பல தொழில்கள்
வெவ்வேறு திருமண இணையதளங்களில் வெவ்வேறு பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறான் இவன். ராகுல் ராஜ்குமார், பிரேம் சாகர், கார்த்திக் ஆகிய பல பெயர்களில் தொடர்பு கொண்டு பேசுவான். அரசு அதிகாரி, தொழிலதிபர், ஐடி ஊழியர் என்று அறிமுகப்படுத்திக்கொள்வது சடத்கானின் வழக்கம்.
தேன் தடவிய வார்த்தை
பெண்களுடன் அஜால், குஜாலாக பேசும் சடத்கான், தன் வலையில் விழும் பெண்களை சில நாட்களிலேயே நேரில் சந்தித்து பேச அழைப்பான். எதிர் தரப்பில் இருந்து கிரின் சிக்னல் வந்த உடனேயே, விலை உயர்ந்த ஆடி கார், பிஎம்டபிள்யூ கார் என்று வாடகைக்கு எடுத்துக்கொண்டு அட்டகாசமாக போய் பெண்களை சந்திப்பான்.
லட்சக்கணக்கில் செலவு
நட்சத்திர ஹோட்டல்களில் பெண்களை சந்திக்கும் இவன், பணத்தைக் கணக்கின்றி வாரி இறைத்து,பெண்ணைத் திகைக்க வைப்பான். பரிசு மழை பொழிந்து மயங்கவும் நெகிழவும் வைப்பான். பெண்கள் உருகும் அந்த தருணத்தில் அவர்களை வீழ்த்திவிடுவான். ஒரு பெண்ணுடனான அடுத்தடுத்த சந்திப்புகளில் சடத்கான் பணம் செலவழிப்பது படிப்படியாகக் குறையும். முடிந்தால், அவர்களையே செலவு செய்ய வைப்பான்.
எஸ்கேப் ஆகும் ரோமியோ
நெருக்கம் அதிகமான நேரத்தில் தனக்கு அவசரமாக ஒரு பெருந்தொகை தேவைப்படுவதாக பரபரப்புக் காட்டுவான். லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு கம்பி நீட்டி விடுவான். இதை ஒரு தொழில் போலவே செய்து வந்துள்ளான். ஒரு பணத்தை, அடுத்த பெண்ணைக் கவர்வதற்கான முதலீடாகப் பயன்படுத்தியிருக்கிறான்.
பெண் புகார்
சடத்கானிடம் ஏமாந்த பெண்கள் போலீசில் புகார் சொல்ல பயந்து அடங்கிப் போனதே அவனுக்கு வசதியாகி போனது. ஒரு பெண் திடீரென அவனது ரோமியோ தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே அவனது கதை வெளியே வந்தது.
பிரீத்தம் குமார் என்ற பெயரில் தன்னிடம் நெருங்கிப் பழகிய ஒருவன், தன்னிடம் இருந்து சில லட்சங்களை வாங்கிக்கொண்டு தன்னை திருமணமும் செய்யாமல் ஏமாற்றிவருவதாக பாகலூர் போலீசில் ஒரு பெண் புகார் அளித்தார்.
ரூ.45 லட்சம் சுருட்டல்
தன்னை அவன் மானபங்கம் செய்துவிட்டதாகப் புகாரில் கூறினார் அந்த பெண். பாகலூர் போலீசார் சடத்கானை கைது செய்தனர். அவன் நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றினாலும், 8 பேரை ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். பல பெண்களிடம் இருந்து ரூ.45 லட்சம் வரை சுருட்டியுள்ளான்.
Recommended Video
நான் அவனில்லை
சடத்கானால் ஏமாற்றப்பட்ட மற்ற பெண்களும் முன்வந்து புகார் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது கர்நாடகா போலீஸ் பெண்கள் முன் வருவார்களா? அப்படியே வந்தாலும் நான் அவனில்லை என்று கூறி அல்வா கொடுத்து விடுவானா?