இன்னும் கொஞ்சம் வருஷம்தான்.. பெங்களூரு எங்கேயோ போகப்போகுது!
Recommended Video
பெங்களூர்: இன்னும் 14 வருடங்களில் மக்கள் தொகையில், மும்பை, டெல்லியை பின்னுக்கு தள்ளி பெங்களூர் முதலிடம் பிடிக்கும் என்று பெங்களூர் வளர்ச்சி குழுமம் (பிடிஏ) அறிவித்துள்ளது.
பெங்களூர் வளர்ச்சி குழுமம் சமீபத்தில், திருத்தப்பட்ட மாஸ்டர் பிளான்-2031 என்ற அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் 2031ம் ஆண்டுக்குள் பெங்களூரில் மக்கள் தொகை 20.3 மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கான வளர்ச்சியாக அது அமையுமாம்.
124 சதவீத வளர்ச்சி
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி, பெங்களூரின் மக்கள் தொகை, 90.45 லட்சம் என்ற அளவில் உள்ளது. புதிய கணிப்புபடி 2011-2031 கால கட்டத்திற்குள் பெங்களூரின் மக்கள் தொகை 124.4 சதவீத வளர்ச்சியை பெறும் என்று கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
ரிங் ரோடு தேவை
அதே நகரம் மேலும் 80 சதுர கிலோமீட்டர் அளவுக்கு பரப்பளவில் பெரிதாகும் என்று பி.டி.ஏ கணித்துள்ளது. எனவே புதிதாக வெளி வட்ட சாலைகளை பெங்களூரில் அமைக்க வேண்டியது அவசியம் என அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
விறுவிறு வேகம் எடுக்கும் ஏரியாக்கள்
ஒசூர் சாலை, மைசூர் ரோடு, பெல்லாரி ரோடு, ஓல்டு மெட்ராஸ் ரோடு மற்றும் சர்ஜாப்பூர் ரோடு ஆகியவற்றை சுற்றியுள்ள பகுதிகள் வெகுவாக வளர்ச்சியடைந்து வருவதால் இப்பகுதிகளில் சாலை விரிவாக்கம் அவசியம் என்று அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
விவசாய நிலம் தேவை
இக்காலகட்டத்தில் விவசாய நிலத்தின் பரப்பளவு, 300 சதுர கிலோமீட்டரில் இருந்து, 322.6 சதுர கிலோமீட்டராக உயர்த்தப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.