கண்முன் நண்பன் நீரில் மூழ்குவதை கூட கவனிக்காமல் செல்ஃபி எடுத்த இளைஞர்கள்.. கல்லூரி மாணவன் சாவு
தண்ணீரில் நண்பன் மூழ்குவதை கவனிக்காமல் செல்ஃபி எடுப்பதிலேயே ஆர்வமாக இருந்ததால் 17 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பெங்களூரு : தண்ணீரில் மூழ்கும் நண்பனை கவனிக்காமல் செல்ஃபி எடுப்பதிலேயே இளைஞர்கள் ஆர்வமாக இருந்ததால் 17 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் பெங்களூரில் அரங்கேறியுள்ளது.
பெங்களூரு அனுமந்தநகரில் வசித்து வருபவர் ஆட்டோ ஒட்டுநரான கோவிந்த். இவரது மகன் விஷ்வாஸ், பசவனகுடி நேஷனல் கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் உள்ள தேசிய மாணவர் படையில் விஷ்வாஸ் சேர்ந்திருந்தார். கடந்த 23ஆம் தேதி கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில் ராமநகர் மாவட்டத்தில் நடந்த முகாமிற்கு விஷ்வாஸ் உள்பட 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்றிருந்தார்கள்.
ராமநகர் மாவட்டத்தின் அருகே உள்ள ரவகோண்ட்லு பெட்டா என்ற மலைப்பகுதியில் கல்லூரி மாணவர்கள் என்.சி.சி பயிற்சிக்காக முகாமிட்டிருந்தனர். இந்நிலையில், விடுமுறை காரணமாக அருகில் உள்ள ஏரி ஒன்றுக்கு மாணவர்கள் குழுவாக குளிக்க சென்றுள்ளனர். ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது ஒரு மாணவன் தனது மொபைலில் அனைவரையும் செல்ஃபி எடுத்துள்ளார்.
|
செல்ஃபி எடுக்கும் மோகத்தில்
செல்ஃபி எடுக்கும் நேரத்தில் குளித்துக்கொண்டிருந்த விஷ்வாஸ் தண்ணீரில் தத்தளித்த படி மூழ்கியுள்ளார். ஆனால், செல்பி எடுக்கும் ஆர்வத்தில் இருந்ததால் அவர் மூழ்குவதை மற்றவர்கள் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, விஷ்வாஸை காணாததால் நண்பர்கள் அனைவரும் தேடியுள்ளனர். இதற்கிடையில், செல்ஃபி எடுத்த புகைப்படங்களை செல்போனில் ஒரு மாணவர் பார்த்தபோது, மற்ற மாணவர்களுக்கு பின்னால் குளத்தில் விஷ்வாஸ் மூழ்குவது தெரிந்தது.
உடல் மீட்பு
இதுபற்றி உடனடியாக ககலிபுரா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து குளத்தில் இருந்து விஷ்வாஸ் உடலை மீட்டார்கள். பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
|
நிர்வாகம் உறுதி
விஷ்வாஸின் உடலை வைத்துக் கொண்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து ம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்துள்ளது. இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்யப்பட்டது.
ஆசிரியர் தலைமறைவு
பலியான விஷ்வாஸின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாணவர்களை முகாமிற்கு அழைத்து சென்ற விரிவுரையாளர் கிரீஷ் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து ககலிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கிரீஷை தேடிவருகின்றனர்.