டிராபிக் விதிமுறை மீறல்: பெங்களூருவில் ஒரேநாளில் 16 ஆயிரம் வழக்கு பதிவு, 253 பைக் பறிமுதல்!
பெங்களூரு: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒருநாள் முன்பாக பெங்களூருவில் டூவீலர் வாகன ஓட்டிகளிடம் போலீசார் நடத்திய அதிரடி சோதனைகளின்போது, விதிமுறைகளை மீறியதாக 16 ஆயிரத்து 475 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே அதிகமான டூவீலர்களை கொண்ட நகரம் பெங்களூரு. அதற்கேற்ப டூவீலர் ஓட்டிகள் வாகன விதிமீறலில் ஈடுபடுவதும் அதிகமாக நடக்கிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் இதுபோன்ற வாகன விதிமீறல்கள் அதிகம் என்பதால் கிறிஸ்துமசுக்கு முந்தைய நாளில் பெங்களூரு போக்குவரத்து போலீசார் நகரமெங்கும் சிறப்பு சோதனைகளை நடத்தினர்.
காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை நடத்தப்பட்ட இந்த சோதனைகளில், விதிமுறை மீறியதாக 16 ஆயிரத்து 475 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நடைபாதையில் வாகனம் ஓட்டியது, அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தியது, சிக்னலை மதிக்க தவறியது, ஒருவழிப்பாதையில் வாகனத்தை இயக்கியது, ஹெல்மெட் அணியால் சென்றது, 3 பேரை ஏற்றிச் சென்றது போன்ற பல்வேறு விதிமீறல்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் அபராதம் செலுத்த தவறியவர்களிடமிருந்து மொத்தம் 253 டூவலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 148 பேரிடம் டிரைவிங் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மைசூரு ரோடு, பேட்டராயனபுரா, விஜயநகர், காமாட்சிபாளையா உள்ளிட்ட சரகங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில்தான் அதிகபட்சமாக 4695 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.