குஜராத்தை சுற்றிப்பார்க்க போகும் இஸ்ரேல் பிரதமர்.. வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்து இருக்கிறார்.
Recommended Video
அஹமதாபாத்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்து இருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அவர் டெல்லி வந்து சேர்ந்தார்.
இவருடைய இந்த பயணம் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இந்த பயணம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
ஜெருசலேம் தான் இஸ்ரேலின் தலைநகர் என்ற அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா ஐநா சபையில் வாக்களித்து இருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமரின் இந்த வருகை மிகவும் முக்கியமாக உலக தலைவர்களால் கவனிக்கப்படுகிறது.
குஜராத்தை பார்வையிடுவார்
காலை பத்து மணிக்கு மோடியும், பெஞ்சமின் நெதன்யாகுவும் அஹமதாபாத் செல்ல இருக்கிறார்கள். அங்கு இருக்கும் விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் வரை இவர்கள் காரில் பயணிப்பார்கள். இந்த கார் மேற்பகுதி திறந்த வகையில் இருக்கும் என்பதால் அவர்கள் அனைத்தையும் பார்க்க முடியும்.
பாதுகாப்பு
இவாங்கா டிரம்ப் இந்தியா வந்த போது எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதோ அதே அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு இருக்கிறது. இவர்கள் பயணிக்க போகும் 8 கிலோ மீட்டர் தூரமும் தற்போது மக்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இருநாட்டு பிரதமருக்கும் வரவேற்பு அளிப்பதற்காக அனைத்து மாநிலங்களில் இருந்தும் மக்கள் கொண்டுவரப்பட்டு, வரிசையாக நிற்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
உண்மை என்ன
பெஞ்சமினின் குஜராத் வருகை குறித்து மோடி கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில் ''குஜராத்தின் உண்மையான வளர்ச்சியை பார்த்து பெஞ்சமின் மகிழ்ச்சி அடைவார். வாக்குறுதிகளை எப்படி காப்பாற்றவேண்டும் என்பது இதன் மூலம் அவருக்கு தெரியும். அறிவியல், தொழில்நுட்பம், விவசாயம் என எல்லாவற்றிலும் எப்படி சமமாக முன்னேற வேண்டும் என்பதும் அவருக்கு தெரியவரும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ சென்டர் திறப்பு விழா
அஹமதாபாத்தில் இன்று இவர்கள் 'ஐ சென்டர்' என்ற தொழில்முனைவோர் மையத்தை தொடங்கிவைப்பார்கள். இது 2011ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டுவிட்டாலும் தற்போது தான் முறையாக தொடங்க உள்ளது. இது தொழில்முனைவோர்களுக்கு நல்ல வழிகாட்டி அமைப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மாற்றும்
இந்த சந்திப்பு இருநாட்டு மக்களின் வாழ்க்கையை மாற்றும் என்று இரண்டு பிரதமர்களும் தெரிவித்துள்ளனர். குஜராத்தில் உள்ள மலைகளில் இருக்கும் சிறு கிராமங்களில் இஸ்ரேல் முறைப்படி விவசாயம் செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த வருகை அதற்கு முன்னோட்டமாக இருக்கும். இது மக்களின் வாழ்க்கையை மொத்தமாக மாற்றும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.