வெற்றிலை போட்டாச்சா.. அப்போ இதோ பிடிங்க, ஒரு ஆணுறை!
பாட்னா: மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், பால்வினை நோய்களை தடுக்கவும் வசதியாக வெற்றிலை பாக்குடன் சேர்த்து இலவசமாக ஆணுறையை வழங்கிவருகிறார் பிகாரை சேர்ந்த ஒரு வெற்றிலை-பாக்கு கடைக்காரர்.
பிகார் மாநிலம், கதிகார் மாவட்டம், பல்கா பசார் பகுதியில், வெற்றிலை-பாக்கு, பீடா கடை வைத்துள்ளவர் நந்த லால். இவர் தனது கடையில் வெற்றிலை வாங்க வருவோருக்கு இலவச ஆணுறை பாக்கெட்டுகளை வழங்கி அசத்தி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகை பெருக்கம், எய்ட்ஸ் நோய் குறித்து படித்து தெரிந்து கொண்டேன். இந்த பிரச்சினைகளை தீர்க்க இந்தியனாக உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் முயற்சி எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது.
எனது கடைக்கு வெற்றிலை, பீடா வாங்க வருவோரில் பெரும்பாலானோர் இளம் வயதினர்தான். எனவே, அவர்களுக்கு ஆணுறைகளை ஏன் அளிக்க கூடாது என்ற எண்ணம் தோன்றியது. ஆணுறை மூலம், மக்கள் தொகை பெருக்கம், எய்ட்ஸ் நோய் பரவல் ஆகிய இரு பிரச்சினைகளையும் கட்டுப்படுத்த முடியும் என்பதால் அந்த எண்ணத்தை செயல்படுத்தினேன்.
ஆணுறை பாக்கெட்டை இலவசமாக கொடுத்தபோது, அதை வாங்க வாடிக்கையாளர்கள் முதலில் தயக்கம் காட்டினர். நான் எடுத்துச் சொன்ன பிறகு ஆணுறைகளை வாங்கிக் கொண்டனர். ஆணுறைக்கு செலவு செய்து ஏன் நஷ்டப்படுகிறீர்கள் என்று எனது மனைவி கடிந்து கொண்டார். பிறகு அவரையும் நான்தான் சமாதானப்படுத்தினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நந்த லாலின் சேவையை அறிந்து கொண்ட தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, தினமும் சில பாக்கெட் ஆணுறைகளை இலவசமாக நந்தலால் கடைக்கு சப்ளை செய்ய தொடங்கியுள்ளது.