மும்பையின் அடுத்த 'வால்டேர் வெற்றிவேல்' யார்?.. அதுக்கும் சூதாட்டம்!.. ரூ. 2000 கோடிக்கு!!
மும்பை: மும்பையில் எதற்கெடுத்தாலும் பெட்தான். கிரிக்கெட் தாண்டி பல விஷயங்களிலும் மும்பையில் சூதாட்டம் நடந்து வரும் நிலையில் மும்பை போலீஸ் கமிஷனராக அடுத்து யார் பதவியேற்பார்கள் என்பதற்கும் பெட் வைத்து வருகின்றனராம் சூதாட்டக்காரர்கள்.
கிட்டத்தட்ட ரூ. 2000 கோடி அளவுக்கு இதில் பணம் புழங்குவதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பெட்டிங் பார்ட்டிகளைப் பிடிக்கும் காவல்துறையின் அடுத்த கமிஷனர் யார் என்பதையே பெட்டிங்கில் கொண்டு வந்து விட்டது காவல்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுவரை கமிஷனராக இருந்த சத்யபால் சிங் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டு போய் விட்ட நிலையி்ல் புதிய கமிஷனர் இன்னும் நியமிக்கப்படாமல் உள்ளார். இதையடு்ததே பெட்டிங் களை கட்டியுள்ளது.
அரசியலில் குதித்த சத்யபால் சிங்
கமிஷனர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த சத்யபால் சிங் உ.பி மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இதற்காகவே அவர் காவல்துறைப் பணியிலிருந்து போய் விட்டார்.
அடுத்த கமிஷனர் யார்
இதையடுத்து யாரை புதிய கமிஷனராகப் போடுவது என்ற ஆலோசனை நடந்து வருகிறது.
ஐந்து பேரின் பெயர்கள் பரிசீலனை
இந்தப் பட்டியலில் ஏடிஜிபி ஜாவேத் அக்தர், தீவிரவாத தடுப்புப் பிரிவு கமிஷனர் ராகேஷ் மரியா, விஜய் காம்ப்ளே, தானே போலீஸ் கமிஷனர் ரகுவன்ஷி, சிறைத்துறை கூடுதல் டிஜிபி மீரா போர்வன்கர் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா...
இதையடுத்து இவர்களில் யார் அடுத்த போலீஸ் கமிஷனர் என்பதை பெட்டிங்கில் கொண்டு வந்து விட்டனர் புக்கிகள். இதற்கு நல்ல கிராக்கியும், வரவேற்பும் ஏற்பட்டுள்ளதாம். கிட்டத்தட்ட ரூ. 2000 கோடிக்கு மேல் பணம் புழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
யார் எப்படியோ.. ஆனால் ராகேஷ் மரியாதான் அடுத்த கமிஷனர் என்று பேச்சு பலமாக அடிபடுகிறது. இவர் சற்று அதிரடியானவர். இவர் கமிஷனராக வந்தால், நிச்சயம் தன்னை வைத்து சூதாடிய புக்கிகளுக்கு ஆப்பு வைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.