இனி, ரோட்டில் துப்பினா... அரசு அலுவலகத்தை 5 நாள் துடைக்கணும்... மகா. அரசு அதிரடி!
மும்பை: சமூக அக்கறை இல்லாமல் கண்ட இடத்தில் எச்சில் துப்புபவர்களைத் திருத்த மகாராஷ்டிர அரசு அதிரடியாக ஒரு திட்டத்தை அமல் படுத்த உள்ளது. அதன்படி, இனி பொறுப்பில்லாமல் சாலையில் எச்சில் துப்புபவர்களே அதனை துடைப்பம் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். அதை விட வேறு சில தண்டனைகளையும் மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
நமது வீட்டைப் போலவே பொது இடங்களையும் சுத்தமாக பேண வேண்டும் என அரசு எவ்வளவோ கூறினாலும், மக்கள் யாரும் கேட்பதாக இல்லை. நினைத்த இடத்தில் எச்சில் துப்புவது, குப்பைகளைப் போடுவது, சிறுநீர் கழிப்பது என அவர்களின் அட்டகாசங்கள் அதிகம்.
அதிலும், பொது இடத்தில் எச்சில் துப்புவதால் மற்றவர்களுக்கு பல்வேறு நோய்த் தொற்றும் ஏற்படுகிறது. எனவே, இத்தகைய பொறுப்பற்றவர்களைத் திருத்த புதிய சட்டம் ஒன்றை அமல் படுத்த உள்ளது மகாராஷ்டிர அரசு.
துப்பினால் துடைக்கணும்...
அதன்படி அம்மாநிலத்தில் உள்ள பொது கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் துப்புபவர்கள், தாங்களே துடைப்பக்கட்டை மூலம், துப்பிய எச்சிலை துடைக்கவேண்டும். இந்த தண்டனையை மறுப்பவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் படுவர்.
அபராதமும்...
அங்கு சென்று மருத்துவமனை வளாகத் தரையைச் சுத்தம் செய்ய வேண்டும். இது தவிர பொது இடத்தில் எச்சில் துப்பியவர்களுக்கு அபராதமும் விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அது மட்டுமல்ல மக்களே!
மேலும் முதல் முறை பொது இடத்தில் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ. 1000 அபராதமும், ஒரு நாள் முழுவதும் அரசு அலுவலகம் அல்லது கட்டடத்தை துடைக்க உத்தரவிடப்படும். இரண்டாம் முறை எச்சில் துப்புபவர்களுக்கு ரு. 3000 அபராதமும், 3 நாட்களுக்கு அரசு அலுவலகத்தைத் துடைக்கவும் உத்தரவிடப்படும். தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ரூ. 5000 அபராதமும், 5 நாட்களுக்குத் துடைக்கவும் உத்தரவிடப்படும்.
லைசன்ஸ் ரத்து...
இது தவிர எச்சில் துப்பி விட்டுச் செல்லும் வாகன ஓட்டிகளின் லைசன்ஸை ரத்து செய்யவும் ஆலோசிக்கப் பட்டு வருகிறது.
பரிந்துரை...
இதற்கான பரிந்துரையை அம்மாநில அரசுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் தீபக் சாவந்த் அனுப்பியுள்ளார். மேலும், இச்சட்டத்தை வரும் டிசம்பர் முதல் அமல்படுத்த உள்ளதாகவும் சாவந்த் தெரிவித்துள்ளார்.
சமூக பொறுப்பு...
பொது இடங்களில் துப்புபவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்க ஏற்கனவே அங்கு சட்டத்தில் இடம் உள்ள நிலையில், எச்சில் துப்புபவர்களுக்கு சமூக பொறுப்பு வரவேண்டும் என்பதற்காகவே, சுத்தம் செய்யும் பணியை தர முடிவெடுத்துள்ளதாக அரசு கூறியுள்ளது.
ஒப்புதல்...
இந்த மசோதாவிற்கு மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் இது அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் சட்டமாக்கி அமல் படுத்தப் படும் என்பது குறிப்பிடத்தக்கது.