பாகிஸ்தானை விட்டு தாவூத் இப்ராகிமை வெளியே கொண்டு செல்ல ஐஎஸ்ஐ முயற்சி!
டெல்லி: ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில்தான் தாவூத் இப்ராகிம் பதுங்கியிருப்பதாகவும், விரைவில் பாகிஸ்தான் தாவூத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கும் என்று நம்புவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ள நிலையில், பாகிஸ்தானை விட்டு தாவூத்தை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தி பாதுகாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக தாவூத்தை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள வடக்கு வசிரிஸ்தானில் உள்ள ஒரு மறைவிடத்திற்கு கொண்டு சென்று விட்டதாக தகவல்கள் தெரிவித்தன. இதையடுத்தே ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடும் வகையில் பேசியிருந்தார்.
இதையடுத்து அந்தப் பகுதி தாவூத்துக்குப் பாதுகாப்பாக இருக்காது என்று அச்சமடைந்த ஐஎஸ்ஐ தற்போது அவரை பாகிஸ்தானை விட்டே வெளியே கொண்டு செல்ல முயற்சி எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரை ஏற்கனவே தாய்லாந்து, நைரோபி, எமிரேட்ஸ், வங்கதேசம் என பல நாடுகளுக்கு மாற்றுவது குறித்த யோசனையில் ஐஎஸ்ஐ இருந்து வந்தது. ஆனால் அதில் ரிஸ்க் இருப்பது தெரிய வந்ததால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக எமிரேட்ஸ் மற்றும் வங்கதேச திட்டம் கைவிடப்பட்டது. இந்தியாவுடன் வங்கதேசம் தற்போது நல்லுறவில் இருப்பதால் அந்த முயற்சியை பாகிஸ்தான் கைவிட்டதாம்.
இதற்கிடையே, கடந்த 20 வருடமாக பாகிஸ்தானில் பதுங்கி வாழும் தாவூத்துக்குப் பாதுகாப்பு அளிக்கும் நடைமுறைகளைப் பிரத்யேகமாக கவனிப்பதற்காகவே ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐயைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தற்போது தாவூத்தை பாகிஸ்தானை விட்டு வெளியே கொண்டு சென்று பாதுகாப்பாக தங்க வைக்க ஐஎஸ்ஐ முயற்சிப்பதாக வெளியாகியுள்ள தகவல்களை இந்திய உளவுப் பிரிவுகளும் தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்துள்ளன.
பிறப்பால் இந்தியரான தாவூத் இப்ராகிம், மும்பையிலும் நாட்டின் பல பகுதிகளிலும் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையவராக உள்ளார். மேலும் போதைப் பொருள் கடத்தல்தான் இவருடைய மிக முக்கியமான தொழிலாகவும் உள்ளது. இவரை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி மத்திய அரசு கடந்த பல வருடமாக கோரி வருகின்ற போதிலும், தாவூத் தங்களது நாட்டிலேயே இல்லை என்று பாகிஸ்தான் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தாவூத் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்பதை அமெரிக்காவும் கூட உறுதி செய்துள்ளது நினைவிருக்கலாம்.