இந்தியர்களின் பாஸ்போர்ட், ஐடி அட்டைகளைக் குறி வைக்கும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ
டெல்லி: இந்தியர்களின் பாஸ்போர்ட்களைத் திருடும் வேலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இறங்கியுள்ளதாக இந்திய உளவு அமைப்பு எச்சரித்துள்ளது.
பாஸ்போர்ட் மட்டுமல்லாமல் அடையாள அட்டை உள்ளிட்டவற்றையும் தகவல்களைத் திருடுகிறதாம் ஐஎஸ்ஐ. இப்படி திருடப்படும் பாஸ்போர்ட் மற்றும் ஐடி கார்டுகளை வைத்து இந்தியாவுக்குள் தனது ஏஜென்டுகளை ஊடுறுவ வைத்து உளவு வேலையில் பாகிஸ்தான் ஈடுபடுகிறதாம்.
இந்தியாவில் பாஸ்போர்ட் திருடு போவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
புள்ளி விபரங்கள்...
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகு அரிதாக இருந்த இந்த திருட்டு தற்போது அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 1800 பாஸ்போர்ட்கள் வரை திருட்டு போயிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் வெளிநாட்டு பாஸ்போர்ட்களும் அடக்கமாகும்.
பறிமுதல்...
சமீபத்தில் இந்திய வங்கதேச எல்லைப் பகுதியில் 9 பாஸ்போர்ட்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் ஐஎஸ்ஐயின் தில்லாலங்கடி வெளிச்சத்திற்கு வந்தது.
கடத்தல்...
இந்த பாஸ்போர்ட்டுகள் கொல்கத்தா, பாட்னா, ஜார்க்கண்ட் ஆகிய பகுதிகளில் அச்சானவை. வங்கதேசத்துக்குக் கடத்தி வரப்பட்டவையாகும்.
ஊடுருவல்...
வங்கதேசத்திலிருந்து இவை சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள ஐஎஸ்ஐ ஏஜென்டுகளிடம் ஒப்படைக்கப்படுமாம். பின்னர் அதை வைத்துக் கொண்டு ஐஎஸ்ஐ உளவாளிகள் இந்தியாவுக்குல் ஊடுருவுவார்களாம்.
ஆதாரமில்லை...
மேலும் பாகிஸ்தானிலேயே கூட இந்திய பாஸ்போர்ட்களை போலியாக அச்சடிக்கவும் செய்கிறார்களாம். ஆனால் இதுதொடர்பான ஆதாரம் இந்திய உளவு அமைப்புக்கு இதுவரை கிடைக்கவில்லை.
சவுதி விசா முத்திரை...
வங்கதேச எல்லையில் சிக்கிய பாஸ்போர்ட்டுகளில் சவூதி அரேபிய விசா முத்திரை இருந்தது. விசாரணையில் இவை வங்கதேசத்துக்குக் கடத்தப்பட்ட விவரம் தெரிய வந்தது.
விசாரணை...
பாஸ்போர்ட் அலுவலகங்களில் உள்ள சிலரை கைக்குள் போட்டுக் கொண்டு இந்த திருட்டில் ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் ஈடுபடுகிறார்களாம். மேலும் மும்மபையைச் சேர்ந்த ஒரு வக்கீல் இதுபோன்ற திருடர்களுக்கு உதவி செய்து வருவதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இவரே போலி பாஸ்போர்ட் தயாரிப்பதற்கும் உதவுகிறாராம். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.