"மிஸ்டு" கால் வருதா.. திருப்பி போன் செய்யாதீங்க.. "வாங்கிரி"யில் சிக்கிருவீ்ங்க.. கவனம்!
டெல்லி: லேண்ட்லைன் பிரபலமாக இருந்த காலத்தில் காதலர்களின் முக்கியக் குறியீடே டெலிபோன் ரிங் தான். ஒரு பெல் மட்டும் அடித்துக் கட் ஆனால், கால் செய்வது காதலர் தான் என காதலிக்கு சூசகமாகப் புரிந்து விடும். எனவே, அடுத்த காலை அட்டண்ட் செய்ய அவர் தயாராகி விடுவார்.
தற்போது இந்தக் கான்செப்டை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் மிகப்பெரிய ஊழல் நடந்து கொண்டிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அது தான் உண்மை.
வாங்கிரி ஊழல்...
இந்த மிஸ்டு கால் ஊழலுக்கு ‘வாங்கிரி ஊழல்' என்றும் பெயர். அதாவது ஒரு ரிங் அப்புறம் கட் செய்து விடுவது.
வெளிநாட்டு எண்கள்...
பெரும்பாலும் இந்த அழைப்புகள் வெளிநாட்டு எண்களில் இருந்தே வரும். முதல் எண்கள் +234 அல்லது +372 என இடம் பெற்றிருக்கும். இவை நைஜீரியா மற்றும் எஸ்டோனியா நாட்டு எண்கள்.
அதிக கட்டணம்...
இந்த எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்று பேசினால் நிமிடத்திற்கு ரூ. 300 முதல் 400 வரை கட்டணம் வசூலிக்கப்படும். பெரும்பாலும் இந்த அழைப்புகளில் பேசுபவர்கள் உங்களுக்கு லாட்டரி விழுந்திருக்கிறது என்றோ, அல்லது உங்கள் உறவினர் காயம் அடைந்திருக்கிறார் என்றோ தான் கூறுவார்கள்.
வங்கிப் பணம் அபேஸ்...
நீங்களும் ஏமாந்து போய் தொடர்ந்து பேசினால், மெல்ல மெல்ல பேசி உங்களது வங்கி விபரங்களை பெறும் வித்தகர்கள் எதிர்முனையில் இருப்பவர்கள். இதனால், உங்கள் வங்கி சேமிப்பும் ஸ்வாகா ஆகிவிடும்.
போஸ்ட் பெயிட் வாடிக்கையாளர்கள்...
பெரும்பாலும் இத்தகையவர்களின் முக்கிய இலக்கு போஸ்ட் பெய்ட் பில் கட்டுபவர்கள் தான். ஏனெனில் ப்ரீபெய்து வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் இவ்வளவு தொகையை செல்லில் வைத்திருக்க மாட்டார்கள். எனவே, போஸ்ட் பெய்ட் பயன்படுத்துபவர்களுக்கு மாதாந்திர பில் வரும் போது தான் ஷாக்கடிக்கும்.
தப்பிக்க வழிகள்...
சரி, இத்தகைய ஊழலில் இருந்து நீங்கள் எப்படித் தப்பிப்பது என்கிறீர்களா. இதோ அதற்கான சில அறிவுரைகள்:
-இது போன்ற தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்பை ஏற்க வேண்டாம். மிஸ்டுகால் பார்த்து மீண்டும் தொடர்பு கொள்ளவும் முயற்சிக்க வேண்டாம்.
- வெளிநாட்டில் நண்பர்கள், உறவினர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களது பகுதி தொலைபேசி எண்ணைத் தெரிந்து வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.
ட்ரூ காலர்...
- ட்ரூ காலர், ஸ்பேம் நம்பர் உள்ளிட்ட சாப்ட்வேர்களை செல்போனில் வைத்துக் கொள்வதன் மூலம் கால் செய்பவரை அடையாளம் கண்டு கொள்ளலாம்.
- போஸ்ட் பெயிட் சிம் வைத்திருப்பவர்கள் மாதாந்திர பில்லை தவறாமல் செக் செய்வது நலம். அப்போது தான் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட இது போன்ற அழைப்புகளை எதிர்காலத்தில் தவிர்க்கலாம்.