எங்களது குடும்பமும் உளவு பார்க்கப் பட்டது... பகத்சிங் குடும்பத்தாரும் திடுக் புகார்!
டெல்லி: நேதாஜியின் குடும்பத்தாரை காங்கிரஸ் உளவு பார்த்ததாக எழுந்த பரபரப்பு ஓய்வதற்குள்ளாகவே, பகத் சிங் குடும்பத்தார் தாங்களும் உளவு பார்க்கப் பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குடும்ப உறுப்பினர்களையும், உறவினர்களையும், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உத்தரவுப்படி உளவுத்துறையினர் கிட்டத்தட்ட 20 வருடம் உளவு பார்த்த விவகாரம் சமீபத்தில் அம்பலமானது.
நேருவுக்குப் பின்னால் வந்த காங்கிரஸ் அரசுகளும் இந்த உளவு பார்த்தலைத் தொடர்ந்து வந்ததாகவும், உளவுத்துறையின் ரகசிய ஆவணத்தில் இந்தத் தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்தப் பரபரப்பு ஓய்வதற்கு முன்னதாகவே, பகத் சிங் குடும்பத்தாரும் தங்களது நடவடிக்கைகள் உளவு பார்க்கப் பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பகத்சிங்கின் தம்பி மகன் அபய் சிங் சந்து கூறுகையில், ‘எங்களது குடும்பமும் பல ஆண்டுகளாக உளவு பார்க்கப் பட்டது. எங்களது போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப் பட்டன' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பகத் சிங்குடன் இணைந்து செயல்பட்ட அஜித் சிங் என்ன ஆனார் என்பது குறித்தும் தெளிவான தகவல்கள் தேவை என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.