பாரத் பந்த்: போராட்டமா, முழுஅடைப்பா? குழப்பத்தில் எதிர்க்கட்சிகள்
சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டதை கண்டித்து இன்று நாடு முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். போதிய முன்னேற்பாடுகள் இல்லாமல் செய்யப்பட்ட இந்த நடவடிக்கையால் மக்கள் செலவுக்கு கையில் பணம் இல்லாமல் அல்லாடுகிறார்கள்.
இந்நிலையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டதை கண்டித்து இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திலும் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு இல்லை. சிலர் முழு அடைப்பு வேண்டும் என்கிறார்கள், சிலர் போராட்டம் மட்டும் போதும் என்கிறார்கள். கேரளாவில் இன்று ஹர்தால் தான் பந்த் இல்லை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் முழு அடைப்பை விரும்புகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆனால் ஆளும் திரிணாமூல் காங்கிரஸோ போராட்டம் மட்டும் தான் என்று கூறியுள்ளது.
பீகார் மற்றும் ஒடிஷாவில் யாரும் முழுஅடைப்பை கண்டுகொள்ளவே இல்லை. கர்நாடகாவிலும் வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டுள்ளன, பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடுகின்றன. தமிழகத்திலும் கடையடைப்பு இல்லை.