நாளை பாரத் பந்த்.. 15 கோடி ஊழியர்கள் பங்கேற்பு.. எவையெல்லாம் முடங்கும்? எவை இயங்கும்?
டெல்லி: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளன.
வங்கி, இன்சூரன்ஸ் பணிகள் உட்பட நாடு முழுக்க அரசு மற்றும் தனியார் பணிகளில் 15 கோடி ஊழியர்கள் இந்த சங்கங்களை சேர்ந்தவர்களாக இருப்பதால் வேலை நிறுத்த பாதிப்பு பெருமளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
எவையெல்லாம் முடங்கும்?
*சாலை போக்குவரத்து, மின் வினியோகம், சமையல் எரிவாயு, எண்ணை சப்ளையில் பாதிப்பு ஏற்படும்.
*மின்சாரம், சுரங்கம், பாதுகாப்பு, டெலிகாம் மற்றும் இன்சூரன்ஸ் துறைகள் பாதிப்பை சந்திக்கும்.
*வங்கிகள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் அனேகமாக மூடப்படும்.
*ஆட்டோ, டாக்சி யூனியன்கள் பலவும் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து்ள்ளதால் அவற்றின் போக்குவரத்து பாதிக்கப்படலாம்.
எவையெல்லாம் இயங்கும்?
*ரயில் போக்குவரத்தில் பாதிப்பு இருக்காது. ரயில்வே ஊழியர்கள் இன்னமும் இதுகுறித்து முடிவெடுக்கவில்லை என்பது இதற்கு காரணம்.
*இதுவரையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. உள்ளூர் நிர்வாகங்கள் நிலைமைக்கு ஏற்ப செப்டம்பர் 2ல் இதுகுறித்து முடிவெடுக்கும்.
எந்தெந்த சங்கங்கள் பந்த்தில் பங்கேற்கின்றன?
*இடதுசாரி தொழிற்சங்கங்களான ஐஎன்டியூசி, சிஐடியூ, ஏஐடியூசி, ஹெச்எம்எஸ், டியூசிசி, எஸ்இடபிள்யூஏ, ஏஐசிசிடியூ, யூடியூசி மற்றும் எல்பிஎப் ஆகியவை பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
*ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்த பாரதிய மஸ்தூர் சங்கம் இந்த பந்த்தில் பங்கேற்கவில்லை.