பாரத் பந்த்.. பீகாரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி முற்றுகையில் சிக்கி மரணம்
Recommended Video
பாட்னா: பாரத் பந்த் போராட்டத்திற்கு பீகாரில் ஒரு 2 வயது சிறுமியின் உயிர் பறி போயுள்ளது.
அவசர சிகிச்சைக்காக சிறுமியை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். ஆனால் வழியெங்கும் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தால் வாகனம் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டது. இதனால் உரிய நேரத்திற்குள் சிகிச்சை பெற முடியாமல் அந்த சிறுமியின் உயிர் பிரிந்து விட்டது.
ஜெஹனாபாத்தில் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது பெற்றோர் ஒரு வாகனத்தில் ஜெஹனாபாத் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் அவர்களது வாகனத்தை வழியில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தி போகக் கூடாது என்று கூறியுள்ளனர். இதனால் வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் குழந்தை உரிய நேரத்தில் மருத்துவமனையை அடைய முடியாமல் பரிதாபமாக இறந்து போனது.
அதேசமயம், குழந்தையை வீட்டிலிருந்து மிகவும் தாமதமாகத்தான் அழைத்து வந்துள்ளனர். அவர்களது வாகனம் தடுக்கப்படாமல் வந்திருந்தாலும் கூட குழந்தையைக் காப்பாற்றியிருக்க முடியாது. எனவே பந்த்துக்கும், மரணத்திற்கும் தொடர்பு இல்லை என்றும் ஒரு தகவல் கூறுகிறது.
இதற்கிடையே, இந்த குழந்தையின் மரணத்திற்கு காங்கிரஸே பொறுப்பு என்று பாஜகவினர் பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர். மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுதான் போராட்டமா. ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம். ஆனால் வன்முறையை யாரும் கையில் எடுக்க முடியாது. பல இடங்களில் பஸ்கள் எரிக்கப்பட்டுள்ளன, கல்வீச்சு நடந்துள்ளது. பெட்ரோல் பங்குகள் சூறையாடப்பட்டுள்ளன என்றார் அவர்.