ராகுல் காந்தியின் ஜன.30 ஶ்ரீநகர் யாத்திரை- அழைப்பு விடுத்த பெரிய கட்சி தலைகள் வர தயக்கமா?
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஶ்ரீநகரில் ஜனவரி 30-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரை பொதுக் கூட்டத்தில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி தமது பாதயாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி. இதனை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சுமார் 3000 கிமீ கடந்து தற்போது ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்தனர். டெல்லியில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களான கனிமொழி, தொல்.திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தற்போது ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. கொட்டும் உறை பனிக்கு நடுவே ராகுலின் இந்த பயணம் தொடருகிறது. இன்னொரு பக்கம், ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் திடீரென நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இருந்தபோதும் ராகுலின் பயணம் தொடருகிறது.
இதனிடையே ராகுல் பயணம் ஶ்ரீநகரை வரும் 30-ந் தேதி சென்றடைகிறது. அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் தற்போதைய நிலையில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் ராகுல் காந்தியின் ஶ்ரீநகர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள். குறிப்பாக மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ், சிபிஎம், சமாஜ்வாதி கட்சி ஆகியவற்றின் தலைவர்கள், ராகுல் கூட்டத்தில் பங்கேற்பதை இதுவரை உறுதி செய்யவில்லை.
சர்ச்சைக்கு.. ஃபுல் ஸ்டாப்.. ஜம்முவில் கடும் குளிரில் ராகுல் காந்தி ஜெர்க்கின் அணிந்து நடைப்பயணம்!
லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. ராகுல் காந்தியின் பாதயாத்திரையை ஒரு கருவியாகவும் பயன்படுத்துகிறது காங்கிரஸ். ஆனால் காங்கிரஸ் தலைமையில் அணிதிரள்வதில் மாநில கட்சிகள் தயக்கத்தை காட்டி வருகின்றன. காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகள் இணைந்தாலே பாஜகவை வீழ்த்த முடியும் என்பது அந்த கட்சிகளின் வியூகம். இதனாலேயெ ராகுல் காந்தியின் ஶ்ரீநகர் பொதுக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிக்கின்றன அக்கட்சிகள் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.