நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. திலீப்புக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.. ஆலுவா சிறையில் அடைப்பு
கொச்சி:பாவனா கடத்தல் வழக்கில் கைதான நடிகர் திலீப்புக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நடிகர் திலீப், கொச்சி அங்கமாலியில் நீதிபதி முன் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. எனவே போலீசார் அவரிடம் விசாரணை நடத்த வாய்ப்பில்லை. மேலும், நீதிமன்ற காவலை தொடர்ந்து, திலீப் ஆலுவா சிறையில் அடைக்கப்படுகிறார்.
நடிகை பாவனா, கடந்த பிப்ரவரி 17ம் தேதி காரில் வந்துகொண்டிருந்தபோது ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, காரில் மானபங்கப்படுத்தப்பட்டார். இதுதொடர்பாக, பல்சர் சுனி என்பவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். திடீர் திருப்பமாக, பல்சர் சுனியின் கூட்டாளி, தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக நடிகர் திலீப், போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், திலீப்பிடமும், அவருடைய மேலாளர் அப்புண்ணி, சினிமா இயக்குனர் நாதிர் ஷா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பல்சர் சுனி அளித்த வாக்குமூலத்தில், "பாவனாவை பாலியல் தொல்லை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை, காவ்யா மாதவன் நடத்தும் கடையில் கொடுத்தேன்" என்று தெரிவித்தார். இதையடுத்து காவ்யா மாதவன் கடையில் போலீசார் சோதனை நடத்தினர். பல்சர் சுனி, பாவனாவை கடத்துவதற்கு முன்பு, அடிக்கடி தொடர்பு கொண்ட தொலைபேசி எண்களை போலீசார் கண்டறிந்தபோது, அந்த எண்கள், திலீப்புக்கு வேண்டியவர்களின் எண் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதுபோன்ற பல ஆதாரங்களை தொடர்ந்து திலீப் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.