ஜெ. அப்பீல் வழக்கை புரட்டி போட்ட 'சொதப்பல்' பவானி சிங்கின் வாதம்!
பெங்களூரு: ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லாது என்று ஹைகோர்ட் அறிவிக்க முக்கிய காரணம், அரசு வக்கீலாக பணியாற்றிய பவானிசிங்கின் சொதப்பல்கள்தான் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், 4 ஆண்டு சிறை தண்டனையையும் விதித்து தீர்ப்பளித்தது.
பவானிசிங் நியமனம்
இந்நிலையில், ஹைகோர்ட்டிலும், பவானிசிங்கே, தானே முன்வந்து ஆஜரானார். அவருக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி வழங்கியது. தமிழக அரசின்கீழ் செயல்படும் லஞ்ச ஒழிப்புத்துறை, ஆளும் கட்சியின் பொதுச்செயலாளருக்கு எதிரான வழக்கில் வக்கீலை நியமித்த விந்தை இந்த வழக்கில் நடந்தது.
சொதப்பல் வாதம்
பிறரின் சந்தேகத்துக்கு ஏற்பவே, பவானிசிங்கும், ஹைகோர்ட்டில் வாதாடிவந்தார். அவர் ஷார்ப்பாக, எந்த வாதத்தையும் எடுத்து வைக்காமல், ஆவணங்களை வாசிப்பதை மட்டுமே பணியாக வைத்திருந்தார். நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு பல நேரங்களில் மவுனத்தையே பரிசாக கொடுத்தார்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இதனால், ஜெயலலிதா தரப்பு பக்கம் பலம் பெருகிக் கொண்டிருந்தது. இந்நிலையில்தான் பவானிசிங் நியமனம் தவறானது, என்று உச்சநீதிமன்ற 3 நபர் பெஞ்ச் தீர்ப்பளித்தது. பவானிசிங் வாதத்தை கருத்திலேயே கொள்ள வேண்டியதில்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
ஒரே நாள்தான்
ஆனால், 3 மாதங்களாக நடந்த வழக்கில், அரசு தரப்பு தனது வாதத்தை சமர்ப்பிக்க கிடைத்ததோ ஒரே நாள். அதுவும் நேரில் வாதாடாமல், எழுத்துப்பூர்வமாக மட்டுமே வாதத்தை சமர்ப்பிக்க வாய்ப்பு கிடைத்தது. இதைத்தான் அரசு வக்கீல் ஆச்சாரியாவும் சுட்டிக் காட்டுகிறார். "ஒரே நாளில், வைக்கப்பட்ட எழுத்துப்பூர்வ வாதத்தை வைத்து, எப்படி எதிர்தரப்பை குற்றவாளியாக நிரூபிக்க முடியும்" என்பது ஆச்சாரியா கேள்வி.
உச்சநீதிமன்றம் அவசரம்
பவானிசிங் வாதம் தவறு என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்ட நிலையில், சரியாக வாதம் செய்வோருக்கு அவகாசம் தந்திருக்க வேண்டும். ஆனால், வழக்கை உடனே முடிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து காட்டிய அவசரம், வழக்கை மறுவிசாரணை செய்ய தேவையில்லாமல் செய்துவிட்டது. எனவே, எதிர்தரப்புக்கு அவகாசம் இல்லை. ஆகமொத்தத்தில், அரசு தரப்பு வீக் ஆகமாற அல்லது பலவீனப்படுத்தப்பட பவானிசிங் வாதம் நன்கு பயன்பட்டுவிட்டது.