பவானிசிங் நியமன வழக்கில், நாட்டுக்கே முன்னுதாரணம் காட்டிய 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு!
டெல்லி: ஜெயலலிதா அப்பீல் மனு மீதான விசாரணையில், அரசு வழக்கறிஞராக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பவானிசிங் ஆஜரானது தவறு என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்மூலம், இதுபோன்ற வழக்கில் நாடு முழுமைக்கும் புது முன்னுதாரணம் உருவாகியுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை கர்நாடக அரசுதான் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேவைப்படும் உதவிகளை செய்ய மட்டுமே தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு.
தமிழகத்திலேயே இந்த வழக்கு நடந்தால், அதிகார துஷ்பிரயோகம் நடந்துவிடும் என்பதால், உச்சநீதிமன்றம் இவ்வாறு கர்நாடகத்தில் சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து உத்தரவிட்டிருந்தது.
முதலில், ஆச்சாரியாவை சிறப்பு வழக்கறிஞராக கர்நாடக அரசு நியமித்த நிலையில், அப்போதைய பாஜக அரசால் அவருக்கு நெருக்கடி தரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆச்சாரியா பதவியை ராஜினாமா செய்தார். எனவே, அப்போதைய பாஜக அரசு, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து பவானிசிங்கை, இவ்வழக்கில் அரசு வக்கீலாக நியமித்தது.
இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ஹைகோர்ட்டில் குற்றவாளிகள் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந் நிலையில், கீழ்கோர்ட் தீர்ப்பு வெளியான சில நாட்களிலேயே ஹைகோர்ட்டில், பவானிசிங்கை ஆஜராக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி வழங்கியது. இதில்தான் சிக்கல் ஏற்பட்டது. வழக்கில் துஷ்பிரயோகம் நடக்க கூடாது என்பதற்காகத்தான், வேறு மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. ஆனால், சம்மந்தப்பட்ட மாநிலமே அரசு வக்கீலை நியமித்தால், அது எப்படி சரியாகும் என்று கேள்வி எழுப்பி உச்ச நீதிமன்றம்வரை சென்றார் திமுகவின் அன்பழகன்.
வழக்கை நடத்தும் மாநிலம் அல்லாது, வேறு மாநிலம், அரசு வழக்கறிஞரை நியமிக்க அதிகாரம் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள இந்த வழக்கு பிற மாநிலங்களுக்கும் ஒரு முன் உதாரணமாக மாறியது. இந்நிலையில்தான், இரு பெஞ்ச் நீதிபதிகள் லோக்கூர் மற்றும் பானுமதி ஆகியோர் முரண்பட்ட தீர்ப்பை வழங்கினர்.
பவானிசிங்கை, தமிழக அரசு நியமிக்க முடியாது என்பதில் இரு நீதிபதிகளுமே ஒரே கொள்கை வைத்திருந்தனர். ஆனால், பவானிசிங்தான் இந்த வழக்கின் பொறுப்பாளர் என்ற முறையில் ஆஜராகியதில் தவறில்லை என்று பானுமதி கூறினார்.
எனவே மூன்று நீதிபதிகள் பெஞ்ச் விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் வேறு மாநிலத்தில் நடைபெறும் வழக்கில், மற்றொரு மாநிலம் அரசு வக்கீலை நியமிக்க முடியாது என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பவானிசிங் வாதிட்டதை ஏற்க கூடாது என்றும் கடுமையாக உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற முன் உதாரண வழக்குகள் இல்லாத நிலையில், இந்த வழக்கு புது முன் உதாரணத்தை நாடு முழுமைக்கும் அளித்துள்ளதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். இனிமேல், மாநிலங்கள் இதுபோன்ற வழக்குகளில் அரசு வக்கீலை நியமிக்கும்போது, இந்த தீர்ப்பு ரெஃபரன்ஸ் செய்யப்படுவது உறுதி.