ஹரித்வார் பெல் மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டவர் 8 மணி நேரம் பிணவறையில் உயிருடன்- திடுக்
ஹரித்வாரில் இறந்ததாக அறிவிக்கப்பட்டவர் பிணவறைக்கு அனுப்பிய பிறகும் 8 மணி நேரம் உயிரோடு இருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹரித்வார் : மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெல் ஊழியர் பிணவறைக்கு அனுப்பிய பிறகும் 8 மணி நேரம் உயிரோடு இருந்த பின்னரே இறந்திருக்கிறார் என்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹரித்வாரின் பெல் மருத்துவமனையில் கடந்த ஜனவரி 12ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் இறந்து விட்டதாக இரவு 11.30 மணியளவில் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து இறந்தவரின் உடல் பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரேத பரிசோதனையில் இறந்த நபர் காலை 8 மணியளவில் தான் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதாவது இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் சுமார் 6 மணி நேரம் பிணவறையில் உயிருடன் இருந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த பிரச்னை விஸ்வரூபமெடுத்ததையடுத்து தலைமை மருத்துவ அதிகாரி அசோக் கெய்ரோலா தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையின் உண்மைத்தன்மை குறித்து இரண்டு மருத்துவர்கள் கொண்ட குழுஆய்வு செய்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. விசாரணைக் குழு அறிக்கை சமர்பித்த பின்னர், பெல் ஊழியர் மரணத்தில் மருத்துவர்கள் தவறு செய்திருப்பது உறுதியானால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைமருத்துவ அதிகாரி அசோக் கெய்ரோலா கூறியுள்ளார்.
மருத்துவ புறக்கணிப்புகள் நடப்பது நாட்டில் இது முதன் முறையல்ல. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் இரண்டடை குழந்தைகள் இறந்துவிட்டதாக பாலிதீன் பையில் போட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இறுதிச்சடங்கு செய்யும் கடைசி நேரத்தில் ஒரு குழந்தை உயிரோடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பிரச்னை விஸ்வரூபமெடுத்ததையடுத்து டெல்லி அரசு அந்த மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்தது. எனினும் நீதிமன்றத்தை அணுகி அந்த மருத்துவமனை மீண்டும் செயல்படத் தொடங்கி விட்டது என்பது வேறு கதை.