ஷாக்கிங்.. உறவினர்களை பார்க்க வந்த சிறார் முகத்தில் "ஸ்டாம்ப்".. சிறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!
போபாலில் சிறையில் உள்ள உறவினர்களை பார்க்க வந்த குழந்தைகளின் முகத்தில் சிறைத்துறை அதிகாரிகள் முத்திரை குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபால்: சிறையில் உள்ள உறவினர்களை பார்க்க வந்த குழந்தைகளின் முகத்தில் சிறைத்துறை அதிகாரிகள் முத்திரை குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடுமுழுவதும் ரக்ஷா பந்தன் பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய பிரதேச சிறையில் உள்ளவர்களை அவர்களின் உறவினர்கள் காணச் சென்றனர்.
அப்போது சிறையில் உள்ள தந்தையை பார்க்கவந்த குழந்தைகளின் முகத்தில் சிறைத்துறை அதிகாரிகள் முத்திரை குத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குழந்தைகள் முகத்தில் முத்திரை
குழந்தைகள் முகத்தில் முத்திரை குத்தப்பட்டிருந்த புகைப்படங்கள் செய்தித்தாள்களில் வெளியாகின. இதற்கு சமூக நல ஆர்வலர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சிறையில் குவிந்த கூட்டம்
இதுகுறித்து விளக்கம் அளித்த சிறைக்கண்காணிப்பாளர் தினேஷ் நர்கேவ், ரக்ஷாபந்தன் நாளில் 8500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களின் உறவினர்களை பார்க்க குவிந்தனர். இதனால் அன்றைய தினம் சிறையில் கூட்டம் அலைமோதியது.
கைகளில் தான் குத்தப்படும்
இதனால் குழந்தைகள் முகத்தில் சீல் போடப்பட்டதாக கூறியுள்ளார். வழக்கமாக சிறைக் கைதிகளை பார்க்க வருபவர்களின் கைகளில் முத்திரை குத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
ஆனாலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறிய நர்கேவ், உள்நோக்கத்துடன் இது செய்யப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
இந்நிலையில் குழந்தைகளின் முகத்தில் முத்திரை குத்தப்பட்டது குறித்து மத்திய பிரதேச மனித உரிமைகள் ஆணையம் போபால் சிறைத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறைத்துறை இயக்குநர் இதுகுறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.