‘ரமணா’ பாணியில் பெண்ணின் சடலத்திற்கு சிகிச்சை… தனியார் மருத்துவமனை மீது புகார்
போபால்: மத்திய பிரதேசத்தில் ரமணா பட பாணியில் பிணத்திற்கு ஒரு வாரம் சிகிச்சை அளித்து ரூ.6 லட்சத்தை வசூலித்த 4 டாக்டர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
விஜயகாந்த் நடித்த ‘ரமணா' திரைப்படத்தில், தனியார் மருத்துவமனையில் இறந்து போன உடலுக்கு சிகிச்சையளித்து பணம் வசூலிப்பது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தன. இதுதான் அந்த படத்தின் திருப்புமுனை காட்சியாக அமைந்தது. உண்மையில் இதுபோல் நடக்குமா என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் இதே போன்ற ஒரு சம்பவம் உண்மையாகவே நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணிற்கு சிகிச்சை
போபாலில் திலா ஜமல்பூர் பகுதியில் வசித்துவரும் மதன் நந்தன் சகாய் என்ற நபர் தனது 56 வயதான மனைவி சுஷ்மாவை போபாலில் உள்ள எல்.பி.எஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
6 லட்சம் கட்டணம்
சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஒருவாரம் கழித்து சுஷ்மா இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிகிச்சை செலவாக ரூ.6 லட்சம் கட்ட வேண்டும் என்றும் பில் கொடுத்தனர்.
ஐ.சி.யுவில் சிகிச்சை
ஆனால் இந்த மரணத்தில் பெண்ணின் கணவரும், குடும்பத்தினரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஓரிரு நாட்களிலேயே அவர் இறந்திருக்கலாம் எனவும், ஒருவாரமாக எங்களது பெண்ணின் உடலை காட்டாமலே சிகிச்சை அளித்தனர் எனவும் போலீசில் அளித்த புகாரில் கூறியுள்ளனர்.
மரணத்தில் சந்தேகம்
சிகிச்சைக்கு அனுமதிப்பட்டு சில நாட்களிலேயே இறந்து போயிருக்கலாம். ஆனால் ஒருவாரமாக அவரது உடலை காட்டாமல் மறைத்து வைத்து சிகிச்சை அளித்ததன் மூலம் இறந்து போன உடலுக்குத்தான் சிகிச்சை அளித்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளனர்.
வழக்குப் பதிவு
இதுகுறித்து போபால் போலீசார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் அங்கிருந்த 4 டாக்டர்கள் தலைமறைவாகினர். தற்போது அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நீதிமன்றம் உத்தரவு
தனியார் மருத்துவமனை மீது விசாரணை நடத்த உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.