திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்கியது… பக்தர்களுக்கு 6 லட்சம் லட்டுகள் தயார்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி லட்டு பிரசாதம் வழங்க 6 லட்சம் லட்டுகள் தயார் செய்து இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பிரம்மோற்சவ தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
திருமலையில் ஏழுமலையானுக்கு பிரம்மன் தானே முன்னின்று இவ்விழாவை நடத்தி வைத்தார் என்பதால் இந்த உற்சவம் ‘பிரம்மோற்சவம்' என்று அழைக்கப்படுகிறது. வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு அரசு சார்பில் பட்டு வஸ்திர சீர்வரிசையை இன்று இரவு 8 மணிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்குகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கோவிலைச் சுற்றி கூடுதலாக 130 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணியில் சிறப்பு காவல் படை போலீசாரும், ஆக்டோபஸ் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. அத்துடன் 4 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவிலின் நான்குமாட வீதிகள், நடைபாதை, இலவச அன்னதான கூடம், மத்திய வரவேற்பு மையம், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், பாபவிநாசனம் தீர்த்தம், பத்மாவதி விருந்தினர் மாளிகை ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேலரியில் நெரிசலின்றி ஆண், பெண் பக்தர்கள் தனித்தனியாக செல்ல தரிசன வரிசைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பாபவிநாசனம் செல்லும் சாலை ஓரம் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
பக்தி டிவியில் ஒளிபரப்பு
திருமலையில் ஆங்காங்கே பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் எல்.இ.டி. பல்புகளால் ஆன சாமி உருவம் வடிவமைக்கப்பட்ட அலங்கார வளைவுகள், அகண்ட வண்ணத்திரைகள் அமைக்கப்பட்டு உள்ளது. கோவிலில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் பக்தி சேனல் மூலம் நேரடியாக பக்தர்களுக்கு ஒலிபரப்பப்படுகிறது.
பேருந்து வசதி
திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல அரசு போக்குவரத்துக்கழகம் சார்பாக 24 மணிநேரமும் நிமிடத்துக்கு 3 பஸ்கள் வீதம் மொத்தம் 520 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு வாகனங்கள் பழுதடைந்தால் அதனை உடனடியாக சரி செய்ய திருப்பதியில் பழுது பார்க்கும் (ஆட்டோ கிளினிக்) மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
6 லட்சம் லட்டுகள்
பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி லட்டு பிரசாதம் வழங்க 6 லட்சம் லட்டுகள் தயார் செய்து இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. லட்டு பிரசாதம் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வதை தடுக்க தீவிர கண்காணிப்புப் பணியில் ஊழியர்கள் ஈடுபடுவார்கள்.
முடி காணிக்கை
திருமலையில் உள்ள 18 கல்யாண கட்டாக்களில் பக்தர்களிடம் இருந்து பெறப்படும் காணிக்கை தலைமுடியை இறக்கவும், சேகரிக்கவும் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பக்தர்களுக்கு ஏதேனும் உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்காக திருமலையில் உள்ள சுவிம்ஸ், திருப்பதி ருயா மருத்துவமனை, மத்திய மருத்துவமனைகளில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்பட்டு இலவச மருத்துவ சேவைகள் செய்ய தயார் நிலையில் உள்ளனர்.
பழனி பூக்கள்
புரட்டாசி பிரம்மோற்சவ விழாவிற்காக பழநி புஷ்ப கைங்கர்ய சபா மூலம் திருப்பதிக்கு 6 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக திண்டுக்கல்லிருந்து 700 கிலோ பூக்கள் திருப்பதிக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
வாகனத்தில் வீதி உலா
இன்று இரவு மலையப்ப சுவாமி பெரிய சேஷ வாகனத்தில் நான்கு மாட வீதிகளிலும் வீதி உலா வருகிறார். சுவாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். கருட சேவை தினமான 20ம் தேதி 5 லட்சம் பக்தர்கள்வரை திருமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.