குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு.. பூபன் ஹசாரிகாவின் குடும்பத்திற்கு மம்தா ஆதரவு
கொல்கத்தா: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத ரத்னா திருப்பிக் கொடுப்பதாக பூபன் ஹசாரிகா குடும்பத்தின் முடிவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.
அசாமில் உள்ள வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு அம்மாநிலத்தில் குடிமக்கள் தேசிய பதிவேடு கொண்டு வரப்பட்டது. இதன்படி குடியுரிமை மசோதா, மக்களவையில் கடந்த ஜனவரி 8- ம் தேதி குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. எனினும் மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
இதில், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்து 6 ஆண்டுகளாக வசித்து வரும் இந்துக்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அசாம் மட்டுமின்றி வட கிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் இறந்த அசாம் மாநில பாடகர் பூபன் ஹசாரிகாவுக்கு கடந்த குடியரசு தினத்தின் போது பாரத ரத்னா விருது அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ஹசாரிகாவின் மகன் தேஜ் ஹசாரிகா இந்த குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அரசிடம் இருந்து பெற்ற பாரத ரத்னாவை திருப்பிக் கொடுப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.
ஹசாரிகாவின் குடும்பத்தினர் எடுத்த முடிவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் வடகிழக்கு மாநில மக்களின் உணர்வுகளை பிரதமர் நரேந்திர மோடி மதிக்கவும் புரிந்து கொள்ளவும் வேண்டும் என மம்தா தெரிவித்துள்ளார்.