பூடானின் ஹைட்ரோ பவர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்.. அசாம் மாநிலத்தில் தீவிர கண்காணிப்பு
திஸ்பூர்: கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அசாமில் இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பூடான் நாட்டிலிலுள்ள ஹைட்ரோ பவர் அணையிலிருந்து, அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டுள்ள காரணத்தால் அசாமில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அசாமின் 20 மாவட்டங்களில் 34 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இன்னமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 933 நிவாரண முகாம்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்னும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பூட்டானின் ட்ரக் கிரீன் பவர் கார்ப்பரேஷன் நிறுவனமானது கிழக்கு பூடானில் 60 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் குரிச்சு என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ட்ரக் கிரீன் பவர் நிறுவனமானது தன் திட்டத்தை செயல்படுத்தி வரும் 55 அடி உயர அணையிலிருந்து, அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற போவதாக அறிவித்திருந்தது.
நேற்று முன் தினம் அறிவித்தபடி பூடானின் குரிச்சு நீர் மின் நிலையத்தின் அணையில் இருந்து, இன்று அதிகாலை அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கீழ் அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்கள் எச்சரிக்கையாக உள்ளன. மாவட்ட நிர்வாகங்கள் சார்பாக கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பார்பேட்டா மாவட்டத்தில், பெக்கி மற்றும் பஹுமாரா நதி கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இன்று அதிகாலை பூடானிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பார்பேட்டாவை அடைய பல மணிநேரம் ஆகும். எனினும் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம் என்று அம்மாநில துணை ஆணையர் முனீந்திர சர்மா கூறியுள்ளார்.
பூடானால் குரிச்சு திட்ட அணையிலிருந்து விடுவிக்கப்பட்ட நீர் அசாமிலுள்ள பல மாவட்டங்களுக்கு பாயும் என்பதால், மாவட்ட நிர்வாகங்கள் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளன. மேலும் அவசரநிலைகளை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
பார்பேட்டா தவிர, கோக்ராஜர், பக்ஸா, சிராங், பொங்கைகான் மற்றும் கம்ரூப் மாவட்டங்களின் சில பகுதிகள் பூட்டான் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படும் நீரால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர், என்று பக்ஸா மாவட்ட துணை ஆணையர் பாஸ்கர் பெகு கூறியுள்ளார்.