வரலாறுகளைத் திரிப்பதும், காவிமயமாக்க முயற்சிப்பதும் நாட்டை சீர்குலைத்து விடும்... பவார் எச்சரிக்கை
மும்பை: வரலாறுகளைத் திரிப்பதிலும், காவிமயமாக்க முயற்சிப்பதிலும் சிலர் கவனம் செலுத்துகின்றனர். அது நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவித்து விடும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
இத்தைக முயற்சிகளை முறியடிக்க வேண்டிய முக்கியக் கடமையில் மதச்சார்பற்ற சக்திகள் உள்ளன. அவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பவார் அழைப்பு விடுத்துள்ளார்.
மும்பையில் நடந்த வரலாற்றியல் நிபுணர்கள் மாநாட்டில் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார் பவார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதிலிருந்து...
இந்து ராஷ்டிரம் .. அபாயகரமானது
இந்து ராஷ்டிரம் என்ற யோசனையே முதலில் அபாயகரமானதாகும். இது நாட்டின் ஒருமைப்பாட்டின் அடித்தளத்தை ஆட்டிப் பார்க்கும் செயலாகும். இதை யாரும் அனுமதிக்கக் கூடாது.
சகிப்புத்தன்மை இன்மை அதிகரிப்பு
நாட்டில் சகிப்புத்தன்மை இன்மை அதிகரித்து வருகிறது. இது அபாயகரமானது. வரலாற்று ஆசிரியர்கள் இதனால் பெரும் கவலை கொண்டுள்ளனர். வரலாறுகள் தங்கள் கண் எதிரேயே மாற்றியமைக்கப்படுவது அவர்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.
வரலாறைக் காக்க தனிப் பிரிவு
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் வரலாறைக் காக்க தனிப் பிரிவு தொடங்கப்படும். நாட்டின் வரலாற்றைத் திரிக்கும் முயற்சிகளை இது தடுக்க முயற்சிக்கும். வரலாறு காவிமயமாவதை இது தடுக்க முயற்சிக்கும்.
பாடப் புத்தகங்களில் கவனம் தேவை
பாடப் புத்தகங்கள் வாயிலாக வரலாற்றைத் திரிக்க முயற்சிக்கிறார்கள். காவியமயப்படுத்துகிறார்கள். இதைத் தடுக்க வேண்டும்., அறிவு சார் சமுதாயம் இதில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்.
தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும்
வரலாறு தவறான முறையில் மக்களிடம் சொல்லப்படும்போது அதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். சரியான வரலாற்றை மக்கள் அறிய வாய்ப்பு தர வரலாற்று நிபுணர்கள் முன்வர வேண்டும்.
சிவாஜி முஸ்லீம்களின் நண்பர்
மராட்டிய மன்னர் வீர சிவாஜியை முஸ்லீ்ம்களுக்கு எதிரானவர் என்பது போல காட்டும் முயற்சிகள் நடக்கின்றன. இது தவறானதாகும். வரலாற்றைத் தவறாக திருப்பும் முயற்சி இது. முஸ்லீம்களுக்கு எதிரானவர் அல்ல சிவாஜி.
உயர் பதவிகளில் நியமித்தவர் சிவாஜி
உண்மையில் தனது படையில் முஸ்லீம்களுக்கு உயரிய இடத்தைக் கொடுத்து அழகு பார்த்தவர் சிவாஜி. இதுபோன்ற அவதூறான செய்திகள் மூலம் மக்கள் மனதில் விஷ விதையை விளைக்க முயற்சிக்கிறார்கள் என்றார் பவார்.