12 வயது சிறுமியின் காதில் இருந்து கொத்துக் கொத்தாக வெளியேறும் உயிருள்ள எறும்புகள்!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 12 வயது சிறுமி ஒருவரின் காதில் இருந்து தொடர்ந்து உயிருள்ள எறும்புகள் வெளிவருவது மருத்துவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் பான்ஸ்காந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரேயா தார்ஜி என்ற 12 வயது சிறுமி. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் காது வலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் ஸ்ரேயா. அதனைத் தொடர்ந்து காது மூக்குத் தொண்டை நிபுணரிடம் அவரை பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியின் காதில் உயிருள்ள எறும்புகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து சிறுமியின் காதில் இருந்து சுமார் 10 எறும்புகளை மருத்துவர் அகற்றினார்.
மீண்டும் எரிச்சல்...
பின்னர் மீண்டும் இரண்டு வாரங்களில் காதுக்குள் எரிச்சல் ஏற்படுவதாக அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் ஸ்ரேயாவை மருத்துவர்களிடம் பெற்றோர் அழைத்துச் சென்றனர்.
மேலும் 10 எறும்புகள்...
அங்கு நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் சிறுமியின் காதுக்குள் இருந்து மேலும் 10 எறும்புகள் வெளியே எடுக்கப்பட்டன.
தொடர்கதையானது...
இவ்வாறு மருத்துவமனைக்குச் சென்று சிறுமியின் காதில் இருந்து எறும்புகள் வெளியேற்றப்படுவது தொடர்கதையாகி விட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
வினோதப் பிரச்சினை...
சிறுமிக்கு ஏற்பட்டுள்ள இந்த வினோதப் பிரச்சினை மருத்துவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்படி உயிருள்ள எறும்புகள் சிறுமியின் காதிற்குள் இருந்து வெளியே வருகின்றன என்ற மர்மத்திற்கு விடை தேடி வருகின்றனர்.
ஆச்சர்யம்...
அடுத்தடுத்து உயிருள்ள எறும்புகளை காதில் இருந்து எடுத்த போதும், எறும்புகளால் சிறுமியின் காதிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது மருத்துவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணி எறும்பு...
வீடியோ மூலம் கண்கானித்தால் மட்டுமே இந்த பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் என மருத்துவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். மேலும், ராணி எறும்பு ஏதாவது சிறுமியின் காதிற்குள் இருந்து கொண்டு முட்டையிட்டு வருகிறதா என்பது குறித்தும் அவர்கள் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.