சைகை மொழியில் ஜன கண மன.. பிரமிக்க வைத்த அமிதாப் பச்சன்
சைகை மொழியில் தேசிய கீதம் பாடிய குழுவினருடன் அமிதாப் பச்சனும் இணைந்து பாடி அசத்தியுள்ளார்.
மும்பை: செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையவர்களையும் தேசிய கீதம் சென்றடையும் வகையில் சைகை மொழியில் அது பாடப்பட்டுள்ளது. அதில் அமிதாப் பச்சனும் கலந்து கொண்டா பாடி அசத்தியுள்ளார்.
தேசியக் கவி ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன கண மன பாடல் இந்தியாவின் தேசியக் கீதமாக உள்ளது. இதை பள்ளிகளிலும், அரசு விழாக்களிலும் பாட வேண்டும்.
இந்தப் பாடலை செவித்திறன் உடையவர்களும், வாய் பேச முடியாதவர்களும் பாட முடியாத நிலை உள்ளது. இவர்களின் குறையை போக்கும் வகையில் தேசிய கீதத்தை சைகை மொழியில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது.
பாகுபாடு இல்லை
அதன்படி ஒரு சைகை மொழி தேசிய கீத வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் மகேந்திர நாத் பாண்டே நேற்று வெளியிட்டார். அவர் கூறுகையில், மாற்றுத் திறனாளிகளை அந்த வார்த்தையில் கூறாமல், "தெய்வ அருள்" பெற்றவர்கள் எனும் பொருள்படும்படியான வார்த்தையை பயன்படுத்தி அழைக்க பிரதமர் மோடி கூறி வருகிறார்.
பெருமைக்குரியது
அத்தகையவர்களுக்காக தேசிய கீதத்தை சைகை மொழியில் உருவாக்கியிருப்பது பெருமையாக உள்ளது. இந்தியா பழமையான நாடு. அதைபோல் சைகை மொழிகளும் பழநெடுங்காலமாக பயன்படுத்தப்பட்டு வந்தது என்றார்.
3.35 நிமிடங்கள்
இந்த வீடியோவில் 3.35 நிமிடங்கள் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. கோவிந்த் நிஹாலனி இயக்கிய இந்த வீடியோவில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் கலந்து கொண்டு பாடுவது போன்றுள்ளது. இவர்கள் செங்கோட்டையில் பாடுவது போன்ற பின்னணியும் உள்ளது.
வீடியோ வெளியீடு
கோவா, போபால், சண்டீகர் மற்றும் கோலாப்பூர் ஆகிய நகரங்களில் பாடல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பூடானுக்கான ஐ.நா. தகவல் மையத்தின் இயக்குநர் டேரக் சீகார் மற்றும் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சுதேஷ் வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.