ஹேமமாலினி இவ்வளவு சில்லறைத்தனமாக இருக்கிறாரே: விபத்தில் பலியான சிறுமியின் தந்தை
ஜெய்பூர்: பெரிய மனிதர்கள் சில்லறைத்தனமாக யோசிப்பார்கள் என்று தான் நினைக்கவே இல்லை என்று பாலிவுட் நடிகை ஹேமமாலியின் கார் மோதியதில் பலியான 4 வயது சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் தவ்சாவில் பாலிவுட் நடிகை ஹேமமாலியின் மெர்சிடீஸ் பென்ஸ் காரும், மாருதி ஆல்டோ காரும் கடந்த வாரம் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் ஆல்டோ காரில் இருந்த சோனம் என்கிற 4 வயது சிறுமி பலியானார். ஹேமமாலினிக்கு காயம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஹேமமாலினி சிறுமியின் தந்தை போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் சோனமின் தந்தை ஹனுமன் கந்தல்வால் கூறுகையில்,
ஹேமமாலினி மட்டும் என் மகளை அவருடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் அவள் இறந்திருக்க மாட்டாள். பெரிய மனிதர்கள் இப்படி சில்லறைத்தனமாக யோசிப்பார்கள் என நான் நினைத்ததே இல்லை. அவரின் மெர்சிடீஸ் கார் தான் மணிக்கு 100 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாக வந்தது. நான் மிகவும் மெதுவாகத் தான் ஆல்டோ காரை ஓட்டினேன்.
நான் எந்த விதிமுறையை மீறினேனாம்? கார் விபத்தில் காயம் அடைந்த என் மனைவி, மகன், மைத்துனி ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர். என் சைக்கிள் கடையை பல நாட்களாக மூடி வைத்துள்ளேன். நீங்களே என் நிலைமையை பாருங்கள் என்றார்.