எதிர்ப்புக்கு நடுவே திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாட கர்நாடக அரசு உறுதி.. கர்நாடகாவில் பதற்றம்
பெங்களூர்: திப்பு சுல்தான் ஒரு சர்வாதிகாரியா அல்லது, சுதந்திர போராட்ட தியாகியா என்பதை தீர்மானிப்பதில் கர்நாடகாவில் பெரும் மோதலே நடைபெற்று வருகிறது.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி, கடந்த ஆண்டு முதல் திப்பு சுல்தான் பிறந்த தினத்தை நவம்பர் 10ம் தேதியாக நிர்ணயித்து, அதை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ், கிறிஸ்தவ அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
திப்பு சுல்தான் பிறந்தது நவம்பர் 20ம் தேதி என்றும், நவம்பர் 10ம் தேதி அவர், மண்டியா மாவட்டம் மேல்கோட்டையை சேர்ந்த ஐயங்கார் ஜாதியை சேர்ந்த இந்துக்கள் 700 பேரை தூக்கிலிட்டு கொன்ற நாள் எனவும் சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இந்துக்களை கொன்ற தினத்தைதான் காங்கிரஸ் அரசு பிறந்த நாள் என்ற போர்வையில் கொண்டாடி மகிழ்கிறது என்பது பாஜக குற்றச்சாட்டு.
இந்நிலையில்தான், கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி திப்பு சுல்தான் பிறந்த தின விழாவை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களின்போது 2 பேர் கொல்லப்பட்டனர். இம்முறையும் எதிர்ப்பு கிளம்பியுள்ளபோதிலும், அறிவித்தபடி வரும் 10ம் தேதி விழா நடத்தப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளதால் அம்மாநிலத்தில் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.
நவம்பர் 10ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க போவதாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் அறிவித்துள்ளனர். கிறிஸ்தவர்களுக்கு எதிராக திப்பு சுல்தான் செயல்பட்டதாக கூறி அந்த அமைப்புகளும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.