பீகாரை வாட்டுகிறது வெப்பம்.. 17 பேர் உயிழந்த பரிதாபம்
பாட்னா: பீகார் மாநிலம் கயாவில் கடும் வெயிலைத் தாங்க முடியாமல் 17 பேர் உயிரிழந்துள்ளனர். வெயிலால் பாதிக்கப்பட்ட 44 பேர் கயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
11 பேர் சிகிச்சை பலனின்றியும், 6 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். 44 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
பருவநிலை மாற்றத்தால், ஆண்டுக்கு ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. நாட்டின் பல மாநிலங்களில் வெயில் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். வெயில் கொடுமையால் பகல் நேரங்களில், வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் உள்ளது. அதே சமயம், வீட்டிற்குள் இருக்கவே முடியாத அளவிற்கு புழுக்கம் மக்களை வாட்டுகிறது.கூடவே, தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது.
தண்ணீர் பஞ்சத்தால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம்.! பள்ளிகளுக்கு லீவு விட கோரிக்கை
இந்தநிலையில், பீகார் மாநிலம் கயாவில் கடும் வெயிலைத் தாங்க முடியாமல் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அனல் காற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்கள் அனைவருக்கும் , உடல்சூட்டால் காய்ச்சல் அதிகளவு இருந்ததாக அவுரங்காபாத் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், வெயிலுக்கு பலியானோர் குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, பீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. பீகாரின் முசாஃபர்பூர் மாவட்டத்தில் 'அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்' மற்றும் 'ஜப்பான் என்சபிலிட்டிஸ்' என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில், கடந்த மாதத்தில் 11 பேர் வரை உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன் 41 ஆக உயர்ந்தது. தற்போது இந்த மூளைகாய்ச்சலால் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயானது மூளையின் செயல்பாட்டை தாக்கி குழப்பம், கோமா, வலிப்பு உள்ளிட்டவைகளை ஏற்படுத்தும் ஒருவித காய்ச்சல் ஆகும். மூளை காய்ச்சல், வெப்பத்தின் தாக்கத்தால், பீகார் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.