பீகாரை சுருட்டி வீசிய ‘கால பைசாகி' சூறாவளி… 65 பேர் பலி: 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்
பாட்னா: பீகார் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீசிய திடீர் சூறாவளிக்கு 65 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
அங்குள்ள பூர்ணியா, மாதேபுரா, சஹார்ஸா, மதுபானி, சமஸ்திபூர், தர்பங்கா ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திடீரென மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீசியது. இதில், அந்த மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார வயர்கள் துண்டிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் சேதமடைந்தன. அத்துடன், சோளம், கோதுமை, பயறு வகைகள் ஆகிய பயிர்கள் நாசமடைந்தன. சாலைகளில் மரங்கள் சாய்ந்து கிடப்பதால், அப்பகுதிகளில் சாலைப் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள், சூறாவளியால் ஏற்பட்ட சேத விவரங்களை கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
நிதிஷ்குமார் ஆறுதல்
பிகாரில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நிதீஷ் குமார் புதன்கிழமை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். அதன் பிறகு பாட்னா திரும்பிய செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர்,
பிகாரில் சூறாவளிக்கு ஏராளமானோர் இவர்களில் 30 பேர் வரை பூர்ணியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 7 பேர் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். மற்ற 5 பேர், பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றார்.
இந்த மாவட்டங்களில் பயிர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உண்மையில், மக்காச்சோளப் பயிர்கள் முழுவதும் சேதமடைந்து விட்டன. பயிர்ச்சேதங்களை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
சூறாவளி பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேசியுள்ளேன். அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார் என்றார் நிதீஷ் குமார்.
சூறாவளிக்கு பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். சூறாவளியால் ஏற்பட்ட பயிர்ச் சேதம், பொருள் சேதங்களுக்கு நிவாரண உதவித் தொகை, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைகள் கிடைத்ததும் அளிக்கப்படும் என்றும் சட்டசபையில் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.
மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி:
இந்த சூறவாளி பற்றி பேசிய பாட்னாவில் உள்ள இந்திய வானிலை நிலைய இயக்குநர் ஆர்.கே. கிரி, மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி சுழன்றடித்தது. நேபாளத்தில் உருவாகி, பூர்ணியா, சீதாமரி, தர்பங்கா ஆகிய மாவட்டங்களை சூறாவளி தாக்கியது. பின்னர், பாகல்பூரில் உள்நோக்கி வீசியது. இந்த பருவத்தில், இதுபோன்ற சூறாவளி வீசுவது, இயல்பானதே. இதை நாங்கள் "கால பைசாகி' அல்லது "நார்வெஸ்டர்' என அழைக்கிறோம்' என்றார்.
பிரதமர் மோடி பேச்சு
இதனிடையே, நிதீஷ்குமாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர், பீகார் சூறாவளி பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடி ட்விட்டரில் இரங்கல்
பீகாரில் சூறாவளிக்கு உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், "பிகாரில் வீசிய சூறாவளி காற்றுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது குறித்து கேள்விப்பட்டு வேதனையடைந்துள்ளேன்; இந்த துரதிருஷ்டவசமான நேரத்தில், பீகார் மக்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்திலும் பாதிப்பு
இதனிடையே, பீகாரையொட்டியுள்ள மேற்கு வங்கத்தின் மால்டா உள்ளிட்ட மாவட்டங்களிலும் சூறாவளி தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பீகாரில் சுழற்றியடித்த சூறாவளி அந்த மாநிலத்தில் பல மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியுள்ளது பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.