பீகாரில் நிதீஷ்ஷூக்கு எதிராக கொம்பு சீவும் பாஜக...எல்ஜெபிக்கு வலை விரிக்கும் தேஜஸ்வி!!
பாட்னா: பீகார் மாநிலம் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. ஆதலால் அங்கு காட்சிகளும், அணிகளும் மாறலாம் என்றே பார்க்கப்படுகிறது. தற்போது ஆளும் ஒருங்கிணைந்த ஐக்கிய ஜனதாதளமும், பாஜகவும் இணைந்து ஆட்சியில் உள்ளன. வரும் தேர்தலில் முதல்வர் நிதீஷ் குமாருக்கு மக்களின் ஆதரவு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், எந்தப் பக்கம் சாயலாம் என்று தெரியாமல் பாஜக விழித்து கொண்டுள்ளது.
ஒருங்கிணைந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் நிதீஷ் குமார் பீகார் மாநிலத்தில் 2005ஆம் ஆண்டில் இருந்து ஆட்சி செய்து வருகிறார். கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள், நிதீஷ் குமாரின் நிர்வாக குறைபாடுகள் கூட்டணிக்குள் சிக்கலை உருவாக்கி வருகிறது. கூட்டணியில் இருக்கும் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வானுக்கு இதனால் பாஜகவிடம் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
நம் கண்ணை நாமே குத்துகின்ற நிலை... சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கைக்கு விஜயகாந்த் எதிர்ப்பு
சிராக் பாஸ்வான்
எப்படி நிதீஷ் குமாரை எவ்வாறு கட்டம் கட்டலாம் என்று பார்த்துக் கொண்டு இருந்த பாஜகவின் கவனம் சிராக் பாஸ்வான் பக்கம் திரும்பியுள்ளது. எம்எல்சிக்கு 12 உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டிய இடத்தில் இருவருக்கும் இடையே சிக்கல் ஏற்பட்டது. இது அடுத்த பரிணாமமாக வரும் சட்டசபை தேர்தலுக்கு இழுத்து சென்றுள்ளது.
கூட்டணியில் சலசலப்பு
எதிர்நோக்கியுள்ள தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சிக்கு 40 இடங்களை ஒதுக்கித் தர முடியாது என்று நிதீஷ் குமார் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இது பாஜகவுக்கு தற்போது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது கூட்டணிக்குள் ஏற்பட்டு இருக்கும் சலசலப்பை பயன்படுத்திக் கொள்ள எதிரணி தயராகி வருகிறது.
தேஜஸ்வி யாதவுடன் கைகோர்ப்பு
சிராக் பாஸ்வானின் மைத்துனர் அனில் சாது ராஷ்ட்டிரிய ஜனதா தளம் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில தலைவராக இருக்கிறார். இவர் தற்போது சிராக் பாஸ்வானுக்கு வலை விரித்து வருகிறார். நிதீஷ் குமாருடன் தானே உங்களுக்கு பிணக்கு, எங்களுடன் வாருங்கள், தேஜஸ்வி யாதவ் தலைமையில் கைகோர்க்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். இவர் மட்டுமில்லை, பப்பு யாதவின் பீகார் ஜனதிகார், காங்கிரஸ் ஆகியவையும் சிராக்கிற்கு தூது அனுப்பி வருகின்றன.
மாற்றி யோசிக்கும் ராம்விலாஸ்
நிதீஷ் குமாருக்கும், சிராக் கட்சிக்கும் இடையே சிக்கல்கள் இருந்தாலும் அவர்கள் ஒத்துப் போவார்கள். ஏனேன்றால், நிதீஷ் குமாருடன் இன்றல்ல, காலம் காலமாக அரசியல் செய்து நெருங்கி பழகி வந்தவர்தான் சிராக்கின் தந்தை ராம் விலாஸ் பாஸ்வான். இவர் தற்போது மத்திய உணவுத்துறை அமைச்சராக இருக்கிறார். ஆனால், இவர் தற்போது கணக்குகளை மாற்றிக் கொண்டு விட்டார். இதுதான் தக்க சமயம் பீகாரில் தனது மகனை வளர்த்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். பாஜக பக்கம் சாய துவங்கிவிட்டார்.
பாஜகவின் லாஜிக்
சிராக்கை பின்னால் இருந்து தூண்டிவிடுவது பாஜக என்றும் கூறப்படுகிறது. அப்போதுதான் அங்கு பாஜகவுக்கு பலம் இருக்கும் என்பது பாஜகவின் கணிப்பு. அதேசமயம் இவர்கள் அடித்துக் கொள்வது எதிரணியில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று பாஜக கருதுகிறது.
வெள்ளம் கொடுத்த அடி
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் இருக்க, அவரது மகன் தேஜஸ்வி யாதவ்தான் கட்சியை வழி நடத்திச் செல்கிறார். பீகார் மாநிலம் மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலம். கொரோனாவை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு ஆளும் கட்சியின் மீது இருக்கிறது. மேலும், சமீபத்தில் பெய்த மழையில் ஏற்பட்ட வெள்ளத்தை மாநில அரசு முறையாக கையாள தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதை தேஜஸ்வி நன்றாக பயன்படுத்தி வருகிறார்.
கூட்டணிக்கு வேறு ஆள் இல்லை
கடந்த 2013ல் நிதீஷ் குமார் அடைந்த வெற்றியை போல் தற்போது பெற முடியாது என்று பாஜக கணித்துள்ளது. ஆதலால், சிராக்கை சீவிப் பார்க்கலாம் என்று திட்டமிட்டுள்ளது. நிதீஷ் குமாருக்கு சிராக்கை பிடிக்காவிட்டாலும், எங்களுக்கு வேறு வழியில்லை, நாங்கள் இணைந்துதான் செல்ல வேண்டும். இங்கு வேறு கூட்டணிகளையும் அமைக்க முடியாது என்று பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிதீஷ் போடும் கணக்கு
கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்தலில், என்டிஏ கூட்டணியில் சிராக்கின் எல்ஜெபி கட்சி இல்லை. 2014 மக்களவைக்கான தேர்தலில்தான் என்டிஏ கூட்டணியில் இணைந்தது. போட்டியிட்ட ஏழு இடங்களிலும் எல்ஜெபி வெற்றி பெற்றது. அதேபோல் 2019 மக்களவை தேர்தலிலும் ஆறு இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்தக் கணக்கை வைத்துதான் சிராக்கின் எல்ஜெபி 35 முதல் 40 இடங்களை கேட்டு வருகிறது. நிதீஷ் குமார் 120 இடங்களில் போட்டியிட திட்டமிட்டு வருகிறார். அப்போதுதான் ஓரளவிற்கு வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள முடியம் என்று நினைக்கிறார். எல்ஜெபிக்கு அதிக இடங்களைக் கொடுத்தால் பாஜகவும், எல்ஜெபியும் கைகோர்த்து தன்னை ஓரம் கட்டுவிடுவார்கள் என்று நிதீஷ் கணக்கிடுகிறார்.
மோடிக்கு ஓகோ ஓகோ
இந்த நிலையில்தான் கடந்த மாதம் நிதீஷ்ஷை எரிச்சல்படுத்தும் வகையில் ராம்விலாஸ் பாஸ்வான் பேட்டி அளித்து இருந்தார். அதாவது, பீகார் மாநிலத்துக்கு மத்திய அரசு கொடுத்து இருந்த உணவு தானியங்களை முறையாக ஏழைகளுக்கு நிதீஷ் குமார் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை தூக்கிப் போட்டார். அதேசமயம் அடிக்கடி பிரதமர் மோடியை புகழ்ந்து வந்தார். இது நிதீஷ் குமாருக்கு ஆத்திரம் மூட்டியது. இந்த வகையில் நிதீஷ்ஷை ராம்விலாஸ் பாஸ்வான் கோபம் அடையச் செய்தார்.
நிதீஷ் ஆட்சி மீது ஊழல்
நிதீஷ் குமார் ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுவதால், பாஜக ஒதுங்கிக் கொள்ளப் பார்க்கிறது. ஆனால், வலுவான கட்சிகள் இல்லாததால், தற்போது சிராக்கின் எல்ஜெபியுடன் கரம் கோர்த்துள்ளது. பீகாரில் பாகல்பூர் கருவூலத்தில் இருந்து முறைகேடாக ரூ. 1,500 கோடி எடுக்கப்பட்டு இருப்பதாக நிதீஷ் குமார் ஆட்சியின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதுகுறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. பல்வேறு நிர்வாக குறைபாடுகளும் இருப்பதால், நிதீஷ் குமாருடன் கைகோர்க்க பாஜக தயக்கம் காட்டினாலும் வழியில்லை என்ற சூழலில் உள்ளது.