பீகார் சட்டசபை தேர்தலில் லாலு மனைவி ராப்ரிதேவி போட்டியில்லை!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்தின் மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரிதேவி போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்த அணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமார் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் லாலுவுக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருந்தது. அப்போது தமது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படமாட்டார்கள் என்று லாலு இறங்கிவந்ததால் சமாதானம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ராப்ரி தேவி அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் 1997ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தவர் ராப்ரி தேவி. "தற்போதைய தேர்தலில் தாம் போட்டியிடவில்லை.. ஆனால் மகன்கள் தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் போட்டியிடுவார்கள்" என்று ராப்ரி கூறியுள்ளார்.