யோகா தினத்தில் பங்கேற்க மாட்டோம்... பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அதிரடி!
நாளை நடைபெறும் யோகா தினத்தில் பீகார் பங்கேற்காது என்று முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பாட்னா : மத்திய அரசு சார்பில் நாளை நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் யோகா தினத்தில் பீகார் மாநிலம் பங்கேற்காது என்று முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முயற்சியால் சர்வதேச யோகா தினம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. பா.ஜ.க. அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறது. அதேபோல், இந்த வருடமும் சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி விளம்பரத்திற்காகவே சர்வதேச யோகா தினத்தை
கொண்டாடுவதால் அதில் பீகார் அரசு பங்கேற்காது என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
விளம்பரத்திற்காக யோகாவா?
தான் யோகவிற்கு எதிரானவர் அல்ல என்றும், யோகாவை விளம்பரத்திற்காக செய்வதையே எதிர்ப்பதாகவும் நிதிஷ்குமார் கூறியுள்ளார். தானும் யோகா செய்வதாகவும் ஆனால் அதனை விளம்பரப்படுத்தியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பீஹாரில் முழுமதுவிலக்கை அமல்படுத்திய நிதிஷ்குமார், இதனை நாடு முழுவதும் செயல்படத்துமாறு பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார்.
முட்டுக்கட்டை
ஆனால் பிரதமர் அந்த கோரிக்கைக்கு செவி சாய்க்காததால் பாஜக சார்பில் கொண்டாடப்படும் யோகா தினத்திற்கு நிதிஷ்குமார் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக தெரிகிறது. யோகா செய்பவர்கள் மது அருந்தாமல் இருப்பது அவசியம், நாடு முழுவதும் யோகாவை விளம்பரப்படுத்தும் பாஜக முழுமதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன் என்றும் நிதிஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
முழுமது விலக்கு இல்லை
நம்மைப் போன்ற ஜனநாயக நாட்டில் வணிகத்தை விட மக்களின் நலன் மிக முக்கியமானது. குறைந்தபட்சமாக பாஜக ஆளும் மாநிலங்களிலாவது முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே நிதிஷ்குமாரின் கோரிக்கை. இதனை நிறைவேற்றாத மோடி அரசை விமர்சிக்கும் விதமாகவே யோகா தினம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இசை தின கொண்டாட்டம்
அதே சமயம் நாளை நடைபெறும் உலக இசை தினத்தை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பீகார் மாநில அரசு சார்பில் பாரம்பரிய இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யோகா தின ஏற்பாடுகள்
பாஜக அரசு சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. யோகா தின சிறப்பை வெளிக்காட்டும் விதமாக பிரதமர் சிறப்பு இணையதளத்தையும் அறிமுகம் செய்துள்ளார். மேலும் சூர்ய நமஸ்காரத்தின் 12 போஸ்டர்களைக் கொண்ட அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐநா சபை ஜூன்21ஐ உலக யோகா தினமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.