பீகார்: 130 எம்.எல்.ஏக்களுடன் ஆளுநரை சந்தித்தார் நிதிஷ்! கட்சியில் இருந்து முதல்வர் மஞ்சி நீக்கம்!
பாட்னா: பீகார் ஆளுநர் கேசரிநாத்தை 130 எம்.எல்.ஏக்களுடன் நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார். முன்னதாக மாநில முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்த ஜிதன்ராம் மஞ்சி ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்ப்பட்டார்.
கடந்த லோக்சபா தேர்தலில் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
தன்னுடைய ஆதரவாளரான ஜிதன்ராம் மஞ்சியை முதல்வராக நியமித்தார். ஜிதன்ராம் மஞ்சி பதவியேற்றது முதலே சர்ச்சைகள்தான்.. பின்னர் நிதிஷ்குமார் ஆதரவாளர்களை மஞ்சி ஓரம் கட்டப் போக அவரது பதவிக்கு ஆபத்து வந்தது.
முதல்வர் பதவியில் இருந்து விலகிவிடுமாறு ஜிதன்ராம் மஞ்சியை நிதிஷ் குமார் வலியுறுத்தினார். ஆனால் இதை நிராகரித்த மஞ்சி அமைச்சரவையைக் கூட்டி சட்டசபையை கலைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி அதிரடி காட்டினார்.
இதற்கு எதிராக ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டினார் நிதிஷ் குமார். கட்சியின் சட்டசபைத் தலைவராகவும் நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.
ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த 130 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதங்களுடன் ஐக்கிய ஜனதா தள மாநில தலைவர் பசிஸ்தா நாராயண் நேற்று ஆளுநர் மாளிகைக்கு சென்றார். ஆட்சி அமைக்க நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுக்கும்படி அவர் கோரிக்கை மனு அளித்தார்.
பீகார் சட்டசபை சபாநாயகர் உதய் நாராயன் சவுத்ரியும் நிதிஷ் குமாரை ஐக்கிய ஜனதா தளத்தின் புதிய சட்டசபைத் தலைவராக அங்கீகரித்துள்ளார்.
பீகாரில் மொத்தம் 233 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளத்தின் 111 எம்.எல்.ஏக்களில் 97 பேர் நிதிஷ் குமாரின் ஆதரவாளர்கள். லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 24 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் மற்றும் சுயேட்சைகள் என 10 எம்.எல்.ஏக்கள் ஆதரவும் நிதிஷ்குமாருக்கு இருக்கிறது.
இதனால் தனிப் பெரும்பான்மைக்கு தேவையானதை விட, அதிகமாகவே நிதிஷ் குமாருக்கு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. இருப்பினும் ஆளுநரின் முடிவு எப்படி இருக்கும் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மஞ்சி நீக்கம்
இதனிடையே மற்ற்றொரு அதிரடி திருப்பமாக முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்து வந்த ஜிதன்ராம் மஞ்சி ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து இன்று அதிரடியாக நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் தமது ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமாகக் கூடும் என்று தெரிகிறது.
ஆளுநருடன் சந்திப்பு
மேலும் இன்று பிற்பகல் ஆளுநர் கேசரிநாத்தை நிதிஷ்குமார் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தமக்கு ஆதரவு தரும் 130 எம்.எல்.ஏக்களையும் நிதிஷ்குமார் அழைத்துச் சென்றார். நிதிஷ்குமாருடன் சரத் யாதவ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோருடம் ஆளுநரை சந்தித்தனர்.
இருப்பினும் ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காததால் பீகார் அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நீடிக்கிறது.