ஊழல் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்... லாலுவை நெருக்கும் நிதிஷ்
ஊழல் முறைகேடு புகார்கள் குறித்து லாலு குடும்பத்தினர் முறையான விளக்கமளிக்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னா: ஊழல் முறைகேடு புகார்கள் குறித்து லாலு குடும்பத்தினர் முறையான விளக்கமளிக்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இதனால் லாலுவுக்கு பீகாரில் அரசியல் நெருக்கடி முற்றியுள்ளது.
ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்தபோது நடந்த பினாமி சொத்து பரிமாற்றம் தொடர்பாக, லாலு மகள் மிசா பாரதி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பின்னர், அவரிடம் 8 மணி நேர தொடர் விசாரணையும் அமலாக்கத்துறை நடத்தியது. பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி, லாலு மனைவி ராபிரி ஆகியோரின் வீடுகளில் ஊழல் புகார் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதனையடுத்து நேற்று, பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசுகையில், " எனது கொள்கையில் எப்போதும் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.
ஊழலுக்கு எதிரான எனது நிலைப்பாடு மிகவும் உறுதியாக உள்ளது. குடும்பத்தினரின் வீடுகளில் நடந்த சோதனைகள் குறித்து லாலு விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும்." என்று கூறினார்.
லாலு விவகாரம் தொடர்பாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், " ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டவர்கள் பொது மக்களை சந்திக்க வேண்டும். தங்கள் மீதான புகார்களிலிருந்து வெளிவர வேண்டும்.
இது போன்ற விவகாரங்களில், எங்கள் கட்சியின் அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்து முன்னுதாரணத்தை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார்.