வரதட்சணை வாங்கும் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் - பீகார் முதல்வர் நிதிஷ்குமார் எச்சரிக்கை!
அரசு ஊழியர்கள் வரதட்சணை வாங்கினால் அரசு வேலை காலியாகிவிடும் என்று பீஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாட்னா : அரசு ஊழியர்கள் வரதட்சணை வாங்கினாலோ குழந்தைத் திருமணங்களை ஊக்குவித்தாலோ எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக அரசுப் பணியில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள் என்ற பீஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் எச்சரித்துள்ளார்.
பீஹார் மாநிலத்தில் முழு மதுவிலக்கு கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியான செயலாக இது பார்க்கப்படுகிறது. சென்னையில் நடைபெற்ற கருணாநிதி சட்டசபையில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகள் நிறைவடையும் வைர விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற போது பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் முழுமதுவிலக்கு என்பது சாத்தியமே என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் பூரண மதுவிலக்கிற்கு அடுத்தபடியாக மாநிலத்தில் வரதட்சணை கொடுமை மற்றும் குழந்தைத் திருமணங்கத் தடுப்பதற்கான புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை நிதிஷ் கையில் எடுத்துள்ளார். இதுவரை மக்களுக்கு வேண்டுகோளாக விடுத்து வந்த நிதிஷ், முதல்முறையாக அரசு ஊழியர்களுக்கு கிடுக்குப்பிடி போட்டுள்ளார்.
உடனடியாக பணி நீக்க வேண்டும்
பீஹாரில் அரசுப் பணியில் இருக்கும் ஊழியர்கள் வரதட்சணை வாங்கினாலோ அல்லது குழந்தைத் திருமணம் செய்து கொண்டாலோ எந்த பாரபட்சமுமின்றி அவர்களின் அரசுப் பணி உடனடியாக பறிக்கப்படும் என்று அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பீஹார் அரசுத் துறையில் பணியில் சேரும் போது தான் "வரதட்சணை வாங்க மாட்டேன், குழந்தைத் திருமணம் செய்ய மாட்டேன்" என்று உறுதிமொழி ஏற்கும் வழக்கமும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பீஹார் மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மதத்தலைவர்களுக்கும் எச்சரிக்கை
பீஹார் பெண்கள் மேம்பாட்டுத் துறையின் கீழ் உள்ள மாவட்ட நிர்வாகங்கள் இதனை கண்காணிக்க உள்ளன. மேலும் மதத்தின் பெயரால் இது போன்ற செயல்களை ஊக்குவிக்கும் மதத்தலைவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான சட்டம்
அரசுத் துறை சார்ந்தவர்கள் வரதட்சணை மற்றும் குழந்தைத் திருமணத்தை ஊக்குவிப்பதில் என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடுமையான சட்டங்களை வகுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நிதிஷ்குமாரின் பாராட்டத்தக்க முயற்சி
கடந்த அக்டோபர் 2ம் தேதி நிதிஷ்குமார் வரதட்சணை வாங்கிக்கொண்டு நடக்கும் திருமணங்களை புறக்கணியுங்கள் என்று கூறி இருந்தார். இதனை வலியுறுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜனவரி மாதத்தில் மனித சங்கிலி பேரணி நடத்தவும் நிதிஷ் திட்டமிட்டுள்ளார்.